வாலிபருக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

349

கன்னியாகுமரி…

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 8 நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட வாலிபரை கொலை செய்து வீசிய சம்பவம் தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு கொலையாளிகளை குளச்சல் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (22) இவர் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமடு எடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி வேலை முடிந்து அவர் மீன்பிடி துறைமுகத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இரவு நான்கு சக்கர வாகனத்தில் அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் செல்லையாவை கடத்தி சென்றது.

கடத்தல் குறித்து செல்லையாவின் தாயார் நாச்சியார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 தனிப்படை அமைத்து செல்லையாவை தேடிவந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் செல்லையாவின் நண்பர் மயிலாடி பகுதியை சேர்ந்த மதுரைவீரன் என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மதுரை வீரனின் வீட்டை செல்லையா தீயிட்டுக் கொளுத்தியது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், மதுரை வீரன் அவரது மனைவி பார்வதி மற்றும் நண்பர்கள் சந்தோஷ் ஐயப்பன் சாத்தன் ஆகியோருடன் நான்கு சக்கர வாகனத்தில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த செல்லையாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

மேலும், அவரை 9ஆம் தேதி அதிகாலை மணக்குடி உப்பளம் பகுதிக்கு கொண்டு சென்று அரிவாளால் வெட்டியும், கடப்பாறை கம்பிகளால் தாக்கி கொலை செய்து உப்பளத்தில் வீசியது தெரியவந்தது.

இதனையடுத்து மதுரை வீரனை போலீசார் கைது செய்து, செல்லையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்து கொலைக்கு உடந்தையாக இருந்த பெண் உட்பட மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.