பெண் சாமியார் சொன்னதை நம்பிய குடும்பத்துக்கு நேர்ந்த கதி!!

316

புதுச்சேரி….

புதுச்சேரி மாநிலம் கோரிமேடு இந்திரா நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் முருகன். கடந்த 2020 ஆம் ஆண்டு இவரது வீட்டின் மேல்தளத்தில் உள்ள வீட்டுக்கு குடிவந்திருக்கிறார் சத்தியவதி. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தொடர்ந்து முருகன் வீட்டினரிடம் அன்பாக பழகியிருக்கிறார் சத்தியவதி. இதனால் முருகனின் மனைவி லட்சுமியும், சத்தியவதியும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர்.

வீட்டின் உரிமையாளரான முருகனுக்கு அக்கா ஒருவர் இருந்திருக்கிறார். அவர் தனது 16 வயதில் மரணமடையவே தனது வீட்டில் தனது அக்காவின் புகைப்படத்தை வைத்து வழிபட்டு வந்திருக்கிறார் முருகன்.

இதனை அறிந்த சத்தியவதி, புது பிளான் ஒன்றை போட்டிருக்கிறார். லட்சுமியிடம் உங்களது வீட்டி பயங்கர தோஷம் இருப்பதாகவும் உடனடியாக அதனை கழிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் சத்தியவதி.

மேலும், தோஷத்தை கழித்தால் மட்டுமே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் எனவும் இந்த சடங்குகள் குறித்து ஆண்களுக்கு தெரியக்கூடாது எனவும் சத்தியவதி கூறியதாக தெரிகிறது. இதனை முருகனின் தாயார் மற்றும் மனைவி லட்சுமி ஆகியோர் நம்பியிருக்கிறார்கள்.

தானே பூஜைகள் செய்வதாக கூறி அதற்கு நிறைய செலவாகும் என சத்தியவதி கூறவே, அவ்வப்போது பெரிய தொகைகளை முருகனின் தாயாரும் மனைவியும் வழங்கியுள்ளனர்.

இப்படி கையில் இருந்த 7 லட்சம் ரூபாய், உறவினர்களிடம் வாங்கிய 5 லட்சம் ரூபாய் மற்றும் 37 சவரன் நகைகளை இருவரும் சத்தியவதியிடம் கொடுத்துள்ளனர். இதனிடையே, முருகனின் தந்தை துரைராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார்.

அதற்காக நடத்தப்பட்ட காரியத்தில் சேர்ந்த பணத்தையும் பெற்றுக்கொண்ட சத்தியவதி, இந்த பணத்தை செலவழித்தால் தோஷம் அதிகமாகிவிடும் எனவும் கூறியதால் இருவரும் அமைதியாக இருந்திருக்கின்றனர். இந்நிலையில், வீட்டுக்கு வந்த உறவினர்கள் முருகனிடம் அவரது தாய் மற்றும் மனைவி கடன் வாங்கியது குறித்து கேட்கவே அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தோஷத்தை நீக்குவதாக கூறி சத்தியவதி பணம் பறித்த தகவல் முருகனுக்கு அப்போதுதான் தெரியவந்தது. உடனே புதுச்சேரி தன்வந்தி நகர் காவல் நிலையத்தில் இந்த விவகாரம் பற்றி புகார் அளித்தார் முருகன். அதனைத் தொடர்ந்து, சத்தியவதியை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் தோஷம் கழிப்பதாக கூறி 12 லட்சம் பணம் மற்றும் 37 சவரன் நகைகளை அபகரித்த பெண் சிக்கியிருப்பது, அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.