குளிக்க சுடுதண்ணீர் வைத்த தாய்,மகளுக்கு நேர்ந்த சோகம்!!

1247

கோவை…..

கோவை விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மனைவி கார்த்திகா. இந்த தம்பதிக்கு அர்ச்சனா (வயது 18) என்ற மகள் இருக்கிறார். ஆனந்த்திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். மகள் அர்ச்சனா தனியார் கல்லூரியில் பயோடெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், வழக்கம் போல அர்ச்சனா கல்லூரிக்கு செல்ல குளியல் அறைக்கு சென்று அங்கிருந்த வாளியில் தண்ணீரை நிரப்பி அதி்ல் வாட்டர் ஹீட்டர் கருவியை வைத்து சுவிட்சை ஆன் செய்துள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீர் சூடாகியுள்ளது.

அதன்பின்னர் சுவிட்சை ஆப் செய்த அர்ச்சனா அவசரத்தில், வாட்டர் ஹீட்டரை எடுக்காமல் குளிக்க தண்ணீரை தொட்டுள்ளார். அப்போது அவர்மீது, மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அர்ச்சனா அலறித்துடித்துள்ளார்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து அவரது தாயார் கார்த்திகா ஓடி வந்து மகளை காப்பாற்ற அவரை தொட்டுள்ளார்.

அப்போது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் ஒரே இடத்தில் தாய்,மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.