நிலச்சரிவில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய நாய் : நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்!!

554

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கவிருந்த குடும்பத்தை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. பேய் மழைக்கு இதுவரை 37 பேர் மரணமடைந்துள்ளனர். குடியிருப்புகளை இழந்த 35,000 க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் அதன் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளில் 3வது மதகில் மட்டும் நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் செருதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கரையோரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மோகனன் என்பவர் இடுக்கி மாவட்டத்தின் கஞ்சிகுழி என்ற பகுதியில் தனது குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அதிகாலை 3 மணி அளவில் அவர் வீட்டின் நாய் குரைத்துள்ளது. ஆனால் அது வழக்கமான ஒன்று தான் என்று எண்ணி அவர் தூங்க சென்றுவிட்டார்.

சிறிது நேரத்திற்கு பின் வழக்கத்திற்கு மாறாக அந்த நாய் ஊளையிட்டுள்ளது. இதையடுத்து வெளியே வந்து பார்த்த மோகனன், வீட்டின் அருகே நிலச்சரிவு ஏற்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தன் மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். மாடியில் இருந்த அவரது தாத்தா, பாட்டியை காப்பாற்ற முடியாமல் போனது.

இது பற்றி அவர் கூறுகையில் “என் வீடு பெரியார் அணையை ஒட்டி உள்ள இடத்தில் இருந்ததால் எங்களை அதிகாரிகள் வெளியேற கூறினார்கள்.

இதை அடுத்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்தேன். அப்படி இருந்தும் இங்கேயும் நிலச்சரிவு ஏற்பட்டு என் தாத்தா, பாட்டியை இழந்துவிட்டேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.