கழிவுநீர்க் குழாயில் பச்சிளம் குழந்தை : பதைபதைப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

609

சென்னை வளசரவாக்கத்தில் கழிவு நீர்க் குழாயில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு பெண்மணி மீட்டெடுத்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த சில நாட்கள் கூட கடந்திடாத நிலையில், ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ கழிவு நீர்க் குழாயின் அடியில் ஒரு துணியை சுற்றி வைப்பது போல், வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

அப்பகுதியில் இருந்த கீதா என்கிற பெண்மணியும் அவரது மகளும் குழந்தையின் அழுகுரல் கேட்டு தேடியிருக்கின்றனர்.

பின்னர் அழுகுரலானது கழிவுநீர்க் குழாயின் அடியில் இருந்து வருவதைக் கண்டறிந்த அந்த தாயும் மகளும், அதன் அருகே சென்று பார்த்துவிட்டு அதிர்ச்சியாகியுள்ளனர்.

அந்த பெண்மணியோ, படுத்துக்கொண்டபடி, கழிவுநீர்க் குழாயின் இடுக்கில் பார்த்து குழந்தை இருப்பதை உறுதி செய்து, அதிர்ச்சியுடன் அந்த குழந்தையை கையைவிட்டு வெளியே எடுத்துள்ளார்.

நீண்ட நேரம் மூச்சுத் திணறிய நிலையிலும், உடலின் மேல் கழிவுகள் ஏறியும் இருந்த குழந்தையை உடனடியாக கழுவி, அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மீட்டுள்ளனர்.

மேலும் சுதந்திர தினத்தன்று பாரத மாதாவே கொடுத்த அந்த குழந்தை என நினைக்கும் அந்த பெண்மணி, அந்த குழந்தைக்கு ‘சுதந்திரம்’ என பெயரிட்டு மகிழ்ச்சியடைந்தார்.

பச்சிளம் குழந்தையினை இப்படி மனிதாபிமானம் அற்று கழிவுநீர்க் குழாயடியில் வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியினரின் நெஞ்சத்தை உலுக்கியுள்ளது.