வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது கேரள மாநிலம்.மீட்புப்பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் 8 நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக இதுவரை 39 பேர் பலியாகியுள்ளதாக மாநில அரசின் வருவாய்த் துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
5.91 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள், தோட்டங்கள், சுமார் 1,513 ஹெக்டர் அளவிலான விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. இதன் மொத்த சேத மதிப்பு 16.65 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது.
கேரள மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதுபோன்ற ஏராளமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அப்படி வந்த ஒரு புகைப்படம் தன்னை அழவைத்து விட்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
அந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்தில் ஒரு சிறுமி கழுத்தளவு வெள்ளத்தில் நடந்து செல்கிறார். அவரது தலையில் உள்ள பாத்திரத்தில் ஒரு நாய்க்குட்டி இருக்கிறது.
அனுபமா வெளியிட்ட இந்த படத்தை ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நாய்குட்டியை காப்பாற்றும் உணர்வு கொண்ட சிறுமியை பாராட்டி வருகிறார்கள்.