20 வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் : தற்போதைய நிலவரம் என்ன? நெகிழும் இரட்டை சகோதரிகள்!!

1142

மேற்கு வங்கத்தில்…..

கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 1 திகதி ஒட்டிப்பிறந்த பச்சிளம் குழந்தைகளாக இருந்த மோனா-லிசா இருவரும் சுமார் 30 மருத்துவர்கள் கொண்ட குழுவால் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

அன்றைய தினத்தில், மேற்கு வங்கத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரித்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல் வெற்றிகரமான அறுவை சிகிச்சை இதுவாகும்.

இந்த அறுவை சிகிச்சையில் பிரித்தெடுக்கப்பட்ட இந்த இரட்டையர்கள் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறியுள்ள நிலையில், தங்களுடைய சுவாரசியமான வாழ்க்கை குறித்து இணையதளம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளனர்.

நாங்கள் இருவரும் இரட்டையர்கள் என்பதை வெகுகாலம் கழித்தே உணர்ந்ததாகவும், பிறகு தங்கள் அம்மா முழு தகவலையும் விளக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். நாங்கள் இருவரும் ஒட்டிப்பிறந்த கதையை திருமணத்திற்கு முன்பே அவர்களது கணவர்கள் வீட்டில் தெரிவித்து விட்டதாகவும், அவர்களும் எந்தவொரு தயக்கமும் இன்றி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக மோனாவும் லிசாவும் புன்னகையுடன் தெரிவித்துள்ளனர்.

தற்போது மோனாவுக்கு 15 மாத குழந்தையும், லிசாவுக்கு 12 மாத பெண் குழந்தையும் உள்ளனர், இரட்டையர்களான மோனா-லிசாவுக்கு கடந்த மாதம் தான் 20 வயது நிறைவடைந்துள்ளது.

இந்த இரட்டையர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரேந்திரநாத் முகர்ஜி, மோனாவுக்கும் லிசாவுக்கும் வெவ்வெறு நுரையீரல் மற்றும் இதயங்கள் இருந்தாலும், சில உள்ளுறுப்புகள் ஒன்றாகவே இருந்தன, அதனால் அறுவை சிகிச்சை சவால் நிறைந்ததாக இருந்தது, சுமார் 8 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மோனாவும் லிசாவும் பிரித்தெடுக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை நிறைவடைந்த சிறிது காலத்திற்கு மோனாவுக்கும் லிசாவுக்கும் உடல் உபாதைகள் இருந்ததாகவும், அவை மருத்துவ உதவியால் விடுப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சிறுவயதில் ஒட்டிப்பிறந்து தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் மோனா-லிசாவின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.