9ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம் : ஆசிரியர் தண்டணையால் விபரீதம்!!

1088

வேலூர்…….

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் வசித்து வருபவர் டெய்லர் குப்பன். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு 2 மகன்கள் இதில் 13 வயது மோகன்ராஜ், 11 வயதில் மற்றொரு மகனும் ஒரே பள்ளியில் படித்து அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 9ம் வகுப்பு இ பிரிவு மாணவர்கள் சத்தமிட்டு பேசி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதற்கு தண்டணை அளிக்கும் வகையில் வகுப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 40 மாணவர்களையும் பள்ளி முழுவதும் 4 சுற்று ஓடி வரும்படி ஆசிரியர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். அதன்படி 40 பேரும் 4 சுற்றுகள் ஓடத் தொடங்கினர்.

இதில் 2 ரவுண்டு ஓடியதுமே மோகன்ராஜ் கீழே மயக்கம் போட்டு விழுந்து விட்டார். உடனே பள்ளியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோரிடம் மயக்கமாக வருவதாக மோகன்ராஜ் கூறவே, அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென வலிப்பு, மாரடைப்பு ஏற்பட்டு மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி சென்ற மாணவன் உயிரிழந்ததை கண்ட பெற்றோர்கள் கதறி துடித்த காட்சி காண்பவர்கள் கண்ணீல் நீரை வரவழைத்தது. 9ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.