திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன் : விபரீத முடிவெடுத்த இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்!!

819

மதுரையில் திருமணத்திற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்த சிந்துஜா என்பவர் தனியார் என்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நுழைவுத்தேர்விற்கான பயிற்சிக்கு சென்றபோது, சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் நட்பு காதலாக மாறியிருக்கிறது. இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படித்தாலும், கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு மதுரை முழுவதும் ஊர் சுற்றியுள்ளனர்.

இதற்கிடையில் இவருடைய காதல் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராம்குமார், தாயார் விருப்பப்படி சிந்துஜாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

சிந்துஜா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் ராம்குமாரின் அம்மாவிற்கு பிடித்து போய்விட்டது.

இதனையடுத்து சிந்துஜா வீட்டிற்கு வருவதாக ராம்குமார் வீட்டார் கூறியுள்ளனர். அதன்படி சிந்துஜாவும் தன்னுடைய வீட்டில் எடுத்துக்கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட சிந்துஜா வீட்டார், ராம்குமார் குடும்பத்தினரின் வரவுக்காக காத்திருந்தனர்.

ஆனால் சிந்துஜாவின் வீடு வசதியின்றி இருந்ததால், வந்த சில மணிநேரங்களில் ராம்குமார் வீட்டார் கிளம்பிவிட்டதாக தெரிகிறது.

அன்றிலிருந்து ராம்குமார், சிந்துஜாவிடம் பேசுவதை குறைத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து போன சிந்துஜா, பிளேடால் கையை அறுத்துக்கொண்டு, என்னை திருமணம் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என வீடியோ ஒன்றினை எடுத்து ராம்குமாரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் ராம்குமார் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால் சிந்துஜா கடந்த 31-ம் தேதியன்று எலி மருந்தினை வாங்கி பேரீச்சம்பழத்தில் வைத்து சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களகா சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னதாக மாஜிஸ்திரேட்டிடம், தனது தற்கொலை முடிவுக்கு தனது காதலன் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் என மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.