குழந்தையின் கண்முன்னே வீட்டில் சடலமாக தொங்கிய தாய் : காணாமல் போன கணவன்!!

1219

சென்னையில் வரதட்சணை கொடுமையின் காரணமாக பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை, சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்கவி (எ) ரோகினி என்பவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 3 வருடத்திற்கும் முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ரோகிணி திருமண வரதட்சணையாக 50 பவுன் தங்க நகை, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், இரு சக்கர வாகனம், ஒரு கார், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.

ஆனால் ரோகிணிக்கு பெண் குழந்தை பிறந்ததால், சுரேஷ் தொடர்ந்து கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளார். மேலும், ரோகிணியின் அப்பாவிடம் உடனடியாக 5 லட்சம் பணம், பெரிய கார் மற்றும் சொந்தமாக பிளாட் கேட்டு போனில் மிரட்டி உள்ளார்.

இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த ரோகிணி, நேற்று இரவு பெற்றோர்களிடம் கணவர் அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் பெற்றோர்கள் போன் செய்த போது ரோகிணி போனை எடுக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் அளித்துள்ளனர்.

அவர்கள் உடனே வீட்டிற்கு சென்று பார்க்கும்போது தூக்கிட்ட நிலையில் ரோகிணி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் ரோகிணியின் உடலை பொலிஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். மேலும் அதே அறையில் அழுது கொண்டிருந்த அவரின் 2வயது குழந்தை அஷ்விந்தாவும் மீட்டெடுத்தனர்.

இதற்கிடையில் தப்பியோடிய கணவர் சுரேசை பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையில் மகள் ரோகிணி சாவில் மர்மம் உள்ளதாக தந்தை நாராயணசாமி பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.