அம்ருதா தப்பான முடிவை எடுக்கலாம் : அவரை போலவே ஆணவ கொலைக்கு கணவரை இழந்த தமிழ்ப்பெண் உருக்கம்!!

793

அம்ருதா

தெலுங்கானாவை சேர்ந்த அம்ருதாவின் கணவர் பிரணய் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலவே தனது கணவரை பறிகொடுத்த தமிழகத்தை சேர்ந்த கெளசல்யா, அம்ருதா குறித்து பேசியுள்ளார்.

மிர்யலகுடா பகுதியை சேர்ந்த பிரணய் என்ற இளைஞர், அம்ருதா என்ற பெண்ணை காதலித்தார். பிரணய் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு அம்ருதாவின் தந்தை மாருதி எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் இதையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அம்ருதா கர்ப்பமானார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை முடித்து மருத்துவமனையிலிருந்து வெளிவந்த பிரணையை மர்ம நபர் ஒருவர் வெட்டி கொன்றார்.

தனது தந்தை தான் அவரை கொன்றதாக அம்ருதா கூறினார். இந்நிலையில் அம்ருதா போலவே தனது கணவர் சங்கரை ஆணவ கொலைக்கு பறிகொடுத்த தமிழகத்தை சேர்ந்த கெளசல்யா இது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், அம்ருதாவின் கணவர் வெட்டப்பட்ட வீடியோவை பார்க்கிறப்ப சங்கரோட கடைசி நிமிடங்கள் என் கண் முன்னர் வந்து போகிறது. மறுபடியும் பலத்த வலியை அனுபவிக்கிறேன். அம்ருதாவோட அப்பா கல்யாணம் ஆகி 8 மாசம் கழிச்சு நடத்தப்பட்ட திட்டமிட்ட ஆணவக் கொலை இது. எங்களோடதும் எட்டு மாசம் கழிச்சுத்தான் நடந்தது.

இனி, அம்ருதாவோட வாழ்க்கை பாதை ரொம்பக் கடினமா இருக்கும். என்னோட வேண்டுகோள் என்னவென்றால், தெலுங்கானாவுல உள்ள தோழர்கள் அம்ருதாவுக்கு உதவியா நிக்கணும்.

இல்லைன்னா அம்ருதா தப்பா முடிவெடுத்திர வாய்ப்புகள் இருக்குது. தயவுசெய்து அம்ருதாவைப் தனியாக விடாமல் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என உருக்கமாக கூறியுள்ளார்.