சுவிஸில் சின்மயிக்கு என்ன நடந்தது? உடன் தங்கியிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் தகவல்!!

1519

மாணிக்க விநாயகம்

சுவிட்சர்லாந்தில் சின்மயியுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற பாடகர் மாணிக்க விநாயகம் அது குறித்து பேசியுள்ளார். கடந்த 2004ல் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சுவிட்சர்லாந்து சென்ற போது அங்கிருந்த கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த இசைநிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான சுரேஷ் என்பவர் கூறுகையில், நிகழ்ச்சி நடந்த இரு தினங்களும் சின்மயி மற்றும் அவர் அம்மா இருவரும் என் வீட்டில் தான் தங்கியிருந்தனர். வைரமுத்து அந்த இடத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறு நகரத்தில் தங்கியிருந்ததாக கூறினார்.

இந்நிலையில் சின்மயியுடன் பாட சென்ற பாடகர் மாணிக்க விநாயகம் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், நிகழ்ச்சி நடந்த நாட்களில் நான், சின்மயி மற்றும் அவர் அம்மா மூவரும் சுரேஷ் வீட்டில் தான் தங்கினோம்.

நிகழ்ச்சி முடிந்ததும் நானும், பாடகர் உன்னி மேனனும் உடனடியாக சென்னை திரும்பினோம். வைரமுத்து அங்கிருந்து அமெரிக்கா செல்வதாக சொன்னார்கள். சின்மயியும், அவர் அம்மாவும் சுவிஸில் சில நாட்கள் தங்கி ஊரை சுற்றி பார்த்துவிட்டு வருவதாக சொன்னார்கள்.

அங்கு எந்த பிரச்சனையும் நடக்காத போது 14 ஆண்டுகள் கழித்து ஏன் சின்மயி இப்போது இப்படி பேசுகிறார் என தெரியவில்லை.
இந்த செய்தி காரணமாக நான் அதிர்ச்சியில் உள்ளேன் என கூறியுள்ளார்.