பட்டும் படாமல் நடந்துகொண்டால் உன் வாழ்க்கை செட்டிலாகும் : பிரபல பாடகியை மிரட்டிய வைரமுத்து!!

1363

மிரட்டிய வைரமுத்து

தமிழ் திரையுலகில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் மீ டூ விவகாரத்தில் சின்மயிக்கு அடுத்து இன்னொரு பாடகி வைரமுத்துவுக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இதுவென கூறும் பிரபல மேடைப் பாடகி புவனா சேஷன், உண்மையை உலகுக்கு சொல்ல வேண்டும் என தமது மகன் ஊக்குவித்ததாலையே தற்போது இதை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

திருச்சி சாரதாஸ் நிறுவனத்திற்காக விளம்பரப் பாடல் பதிவின்போது வைரமுத்துவின் அறிமுகம் கிடைத்தது எனக் கூறும் பாடகி புவனா, உங்க குரல் மிக இனிமையாக இருக்கிறது, தமிழ் உச்சரிப்பு பிரமாதம், பாடி முடித்து விட்டு வாருங்கள் பேசலாம் என அவர் அழைப்பு விடுத்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

பின்னர் தொலைபேசியில் அழைக்க ஆரம்பித்த வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகப்படுத்துகிறேன் என்பது தொடங்கி பாரதி, பாரதிதாசன், இளையராஜா என பல நாட்கள் பேசியதாகவும், அப்போது அவர் கண்ணியமாக நடந்து கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

திடீரென்று ஒருநாள் அழைத்து, ரொம்ப நாளா அறிவுப்பூர்வமான ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தேன், என் தேடல் உன்னில் முடிந்துவிடூமோ என தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இப்படி சில நாட்கள் தொலைபேசியில், வைரமுத்து கவிதை வாசித்ததை குறிப்பிட்ட பாடகி புவனா, ஆனால் அவரிடம் தமக்கு இது சங்கடமாக இருக்கிறது என்பதை எவ்வாறு தெரிவிப்பது என்ற கலக்கமே மேலோங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களில், தொலைபேசியில் அழைத்த வைரமுத்து, மலேசியாவில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது, நீ வரியா என கேட்டுள்ளார். பாடுவதற்காகவா இல்லை நிகழ்ச்சி தொகுத்து வழங்கவா என புவனா கேட்டுள்ளார், அதற்கு பதிலளித்த வைரமுத்து ரெண்டும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகூட புரியாத சின்னப் பெண்ணா நீ? பட்டும் படாமல் நடந்துகொண்டால் உன் வாழ்க்கை செட்டிலாகும் என வைரமுத்து தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து தொலைபேசியை துண்டித்ததாக கூறும் புவனா, அதற்கு அடுத்த சில நாட்கள் வைரமுத்துவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்றார்.

பின்னர் ஒருநாள் அழைத்து, மலேசியாவுக்கு டிக்கெட் போடுறேன், கடைசியாக கேட்கிறேன் நீ வரியா இல்லையா என மிரட்டும் தொனியில் கேட்டுள்ளார். அதன் பின்னர் வைரமுத்துவின் உண்மையான செல்வாக்கு என்ன என்பது தமக்கு தெரியவந்தது என கூறும் பாடகி புவனா,

அதன் பின்னர் தொடர்ந்து 3 வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கிடைத்த வாய்ப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாடல் பதிவு கூடம் வரை சென்று திருப்பி அனுப்பப்பட்ட பல நாட்களை இன்னும் மறக்கவே முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவால் பல படங்களில் பாடும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது பல நாட்கள் கடந்து மேனேஜர் ஒருவரால் தெரியவந்த போது ஏற்பட்ட அதிர்ச்சி விட்டுவிலக நாளானது எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி திரைப்படத்துறை வேண்டாம், மேடையில் பாடி எனது தாகத்தைத் தணிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, அன்றில் இருந்து இதுவரை மேடைகளில் பாடி வருவதாகவும் புவனா சேஷன் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.