தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 -மேஷம்

1627

நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். உங்களுடைய ராசிக்கு சந்திரன் 2ம் இடத்தில் நிற்கும் நேரத்தில் இந்த 2018ம் ஆண்டு பிறப்பதால் வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள்.

வருடப் பிறப்பின்போது ராசிநாதன் செவ்வாய் 7ம் வீட்டில் நிற்பதால் கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களுடைய திறமைக்கு பரிசு, பாராட்டுகள் கிட்டும்.

விலை உயர்ந்த தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள். 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 8ம் வீட்டில் சென்று மறைவதால் சின்னச் சின்ன விஷயங்களையும் சற்று போராடி முடிக்க வேண்டி வரும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் சூரியன் பகைக் கோளான சனியுடன் இணைந்து நிற்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட கவலைகள் வந்து போகும். உங்களின் ஜீவனாதிபதியும்லாபாதிபதியுமான சனிபகவான் இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 9ம் இடத்திலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்தந்தையாருடன் மோதல்கள் வரும்.

அவருக்கு நெஞ்சு எரிச்சல், ரத்த அழுத்தம், வயிற்று உபாதைகளெல்லாம் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் சின்னச் சின்ன தடைகள் வந்து போகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்ந்திருப்பதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். சிறு சிறு விபத்துகள் நிகழக்கூடும். பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும்.

அரசு விவகாரங்களில் கவனம் தேவை. 10.3.2018 முதல் 02.05.2018 வரை உள்ள காலக்கட்டங்களில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருப்பதால் தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். 03.5.2018 முதல் 30.10.2018 வரை கேதுவுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுக அவமானங்களும் வந்து போகும். ஆனால், பதவி உயரும்.

உங்களை பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். 02.08.2018 முதல் 29.8.2018 வரை உள்ள காலக்கட்டத்திலே சுக்கிரன் 6வது வீட்டிலே சென்று மறைவதனால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், வாகன விபத்து, தங்க ஆபரணங்கள் தொலைந்து போகுதல் போன்ற நிகழ்வுகள் நிகழக்கூடும். கவனமாக இருப்பது நல்லது. இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே நிழல் கிரகங்களான ராகு 4ம் இடத்திலும், கேது 10லும் தொடர்வதால் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.

சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும் அல்லது வேறு ஊர், மாநிலம் மாற வேண்டிய சூழலும் ஏற்படும். இடப்பெயர்ச்சி உண்டு. தாயார் கோபத்தில் ஏதேனும் திட்டினாலும் அதையெல்லாம் உடனே மறந்து விடுவது நல்லது. அவருக்கு நீரிழிவு நோய், மூட்டு வலி, நரம்புச் சுளுக்கு வந்து போகும். புறநகர் பகுதியில் வீடோ, மனையோ வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. மற்றவர்கள் அதை உரிமைக் கொண்டாட வாய்ப்பிருக்கிறது. பழைய கடனை நினைத்து கவலைப்படுவீர்கள். சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டேயிருக்கும்.

வியாபாரிகளே! கடந்தாண்டில் ஏற்பட்ட நட்டங்களையெல்லாம் சரி செய்வீர்கள். மக்களின் ரசனையைப் புரிந்து கொண்டு புது வியூகம் அமைத்து லாபம் ஈட்டுவீர்கள். முக்கிய சாலைக்கு கடையை மாற்ற திட்டமிடுவீர்கள். சிலர் சொந்த இடம் வாங்கி கடையை மாற்றுவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி திருத்துவீர்கள். மாற்றுமொழிப் பேசுபவர்களும், பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உணவகம், தங்கும் விடுதி, கண்சல்டன்சி, சிமென்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். ராகு 4ல் நிற்பதால் கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பங்குதாரர்கள் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உத்யோகஸ்தர்களே! உத்யோக ஸ்தானாதிபதி சனி சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள். என்றாலும் கேது 10ல் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், மற்றொரு சாரர் எதிராகவும் செயல்படுவார்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வி மற்றும் காதல் விஷயத்தில் இருந்து வந்த குழப்பங்களிலிருந்து மீள்வீர்கள். இனி தெளிவான முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். உங்கள் தகுதிக் கேற்ப அதிக சம்பளத்துடன் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும். திருமணம் ஏற்பாடாகும். ஆரோக்கியமும் சீராகும்.

மாணவ-மாணவிகளே! வகுப்பாசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். படிப்பில் மட்டுமல்லாமல் கலைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். சிலருக்கு விளையாட்டில் பதக்கம் கிடைக்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெற்று விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள்.

அரசியல்வாதிகளே! உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் வலுவிழப்பார்கள். மாவட்ட அளவில் முக்கிய பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மக்களின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். பெரிய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.

விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். காய்கறி, தானிய வகைகளால் லாபமடைவீர்கள். சிலர் புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். இந்த 2018ம் ஆண்டு எவ்வளவோ முயன்றும் முன்னுக்கு வராமல் முனகிக் கொண்டிருந்த உங்களை வெற்றி பெற வைப்பதுடன், எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்:

செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை தரிசித்து வணங்கி வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.