தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – மிதுனம்

2124

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்களே! பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! மனித நேயம் உள்ளவர்களே! பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகும் நீங்கள், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட மாட்டீர்கள். சுக்கிரன் உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 2018ம் வருடம் பிறப்பதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும்.

இந்தப் புத்தாண்டு உங்களுடைய ராசிக்கு 12ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் சப்தமஜுவனாதிபதியுமான குருபகவான் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மாறுபட்ட சிந்தனையால் செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் சென்று மறைந்து சகட குருவாக அமர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு குடும்பத்தினரை சந்தேகப்பட வேண்டாம். கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. வருடம் பிறக்கும் போது ராசிநாதன் புதன் 6ம் இடத்தில் மறைந்திருப்பதால் நரம்புச் சுளுக்கு, கழுத்து வலி, காய்ச்சல், சளித் தொந்தரவு வந்து போகும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பண உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். செவ்வாய் 5ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே சனி உங்களுடைய ராசிக்கு 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக நீடிப்பதால் தன்னம்பிக்கை குறையும். ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் மோதல்கள் வரக்கூடும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவது நல்லது. மனைவி அடிக்கடி கோபப்படுவார். சில நேரங்களில் உங்களின் குற்றம், குறைகளை பட்டியலிட்டுக் கொண்டிருப்பார் அதையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

மனைவிக்கு ஃபைப்ராய்டு, மஞ்சள் காமாலை, முதுகுத் தண்டில் வலி வந்து போகும். அடுத்தடுத்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். சிலர் உங்களை பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாத போது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். மற்றவர்களைக் குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை நீங்களே பரிசோதித்துப் பார்த்து சரிப்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.

01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியன் சனியுடன் சேர்ந்திருப்பதால் அக்காலக்கட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். இளைய சகோதரம் வகையில் அலைச்சல்கள் அதிகரிக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு தலைச்சுற்றல், மூட்டு வலி, முன்கோபம் வேலைச்சுமை வந்து போகும். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.

03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சனை வந்து போகும். இரவில் தொலைதுதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. 2ல் ராகுவும், 8ல் கேதுவும் இந்தாண்டு முழுக்க நீடிப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை கண்டுபிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும்.

திடீர் திடீரென்று ஒருவித மனோபயம் வந்து போகும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். பேசும் போது கவனமாக இருங்கள். யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். பார்வைக் கோளாறு வரக்கூடும். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது.

சோப்பு, ஷாம்பூ மாற்றாதீர்கள். அலர்ஜி வரக்கூடும். அக்கம் பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். இடமாற்றம் உண்டு. வாகனத்தை எடுக்கும் முன் எரிப்பொருள், ப்ரேக் ஒயர் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு செல்வது நல்லது. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.

வியாபாரிகளே! ஏற்ற இறக்கங்கள் இருக்கும். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். சந்தை நிலவரங்களை உன்னிப்பாக கவனியுங்கள். பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம். இருப்பதை வைத்து லாபம் ஈட்டப்பாருங்கள். புகழ் பெற்றவர்கள் உங்களுக்கு வாடிக்கையாளர்களாக வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். அயல்நாடு, வெளிமாநிலத் தொடர்புடனும் புது வியாபாரம் செய்யத் தொடங்குவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். சக ஊழியர்களுக்கும் சலுகைகள் பெற்றுத் தருவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வையெல்லாம் எதிர்பார்க்கலாம்.

கன்னிப்பெண்களே! நீங்கள் நினைத்தப்படி எல்லாம் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருசிலர் உங்களுடைய காதலைப் புரிந்து கொள்வார்கள். கல்யாணம் கூடி வரும். லேப்டாப், மொபைல் போன் புதிதாக வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். உங்களுக்கிருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும்.

மாணவ-மாணவிகளே! படிப்பிலே முன்னேறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். கவிதை, கட்டுரைகள் எழுதி பரிசுப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.

அரசியல்வாதிகளே! பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால், உங்களால் பயனடைந்தவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுதல் போன்றவை நிகழும். ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

கலைத்துறையினரே! ஒருபக்கம் உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம்தான் இருக்கும். அதற்காக அஞ்ச வேண்டாம். புதிய வாய்ப்புகளும் கூடி வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

விவசாயிகளே! மாற்றுப் பயிர் மூலமாக கூடுதல் ஆதாயமடைவீர்கள். தண்ணீர் பிரச்னையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது போல தான் இப்போதைய நிலை இருக்கும். இந்த 2018ம் ஆண்டு சின்னச் சின்ன எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளில் தாமதத்தையும் தந்தாலும் மாற்றுப் பாதையில் சென்று வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்:திண்டுக்கல்லிற்கு அருகேயுள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலுக்குள்ளே அருளும் பைரவரை தரிசித்து வணங்கி வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.