தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – தனுசு

2168

தன் சொந்த உழைப்பால் உயர விரும்பும் நீங்கள், பாதை மாறி சென்று பணம் சம்பாதிக்க தயங்குவீர்கள். பாவப்புண்யம் அடிக்கடி பார்ப்பீர்கள். அதிகம் ஆசைபடாமல் அடுத்தவர் சொத்து மீதும் கண் வைக்காமல், உதிக்கும் போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்கள் நீங்கள் தான். புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுடைய ராசிக்குள்ளேயே சூரியனும், சுக்கிரனும் நிற்பதால் செயலில் வேகம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும்.

வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் லாப வீட்டில் நிற்கும் நேரத்தில் இந்த 2018ம் வருடம் பிறப்பதால் உங்களை தலைநிமிர வைக்கும். வருமானம் உயரும். இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல், செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்துச் செல்லும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வரக்கூடும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள்.

ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 12ம் வீட்டில் சென்று மறைவதால் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்துச் செல்லும்.

குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். வருடப் பிறப்பு முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்ந்திருப்பதால் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். அவருடன் சின்ன சின்ன மோதல்கள் வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கை தவிர்க்கப்பாருங்கள்.

வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் சனியுடன் சேர்ந்து பலவீனமடைவதால் மனதில் இனந்தெரியாத குழப்பம் வந்துப் போகும். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். 02.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் சில நேரங்களில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல ஆழ்மனதில் ஒரு வெறுமை, வெறுப்பு வந்துச் செல்லும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம்.

வரன் வீட்டாரை நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. 22.04.2018 முதல் 15.5.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகளும் வரக்கூடும். இந்தப் புத்தாண்டு முழுக்கவே ராகு 8ம் வீட்டிலும், கேது 2ம் இடத்திலும் அமர்ந்திருப்பதால் வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்தப்பாருங்கள். எதையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

பல் வலி, காது வலி, கண் எரிச்சல் வந்துப் போகும். முன்கோபத்துடன் பேசி சொற் குற்றம், பொருள் குற்றத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலமாக சச்சரவுகளில் சிக்குவீர்கள். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம். வெளிநாடு சென்று வருவீர்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

வியாபாரிகளே! கணிசமாக லாபம் உயரும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். உங்களுக்கு எதிராக புதிது புதிதாக போட்டியாளர்கள் வருவார்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலமாக வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜென்மச் சனி தொடர்வதால் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு தக்க சமயத்தில் கிடைக்காது அந்த நேரத்தில் உங்கள் மீது கேஸ், கொரிஸ் போட்டு அனுப்புவார்கள். சிலருக்கு மெமோ கொடுப்பார்கள். இத்தனை வருட காலமாக உழைத்து, எல்லாம் கூடி, கனிஞ்சி வரும் நேரத்தில் இப்படி ஆகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இழந்த சலுகைகளை போராடி பெறுவீர்கள்.

கன்னிப்பெண்களே! உங்களின் ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கல்யாண பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். ஜென்மச் சனியால் அசதி, சோர்வு, பசியின்மை, சிறுநீர் பாதையில் அழற்சி எல்லாம் வரக்கூடும்.

மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். அவ்வப்போது தூக்கம், மந்தம், மறதி வந்து நீங்கும். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி பெற போராடியும், அதிக செலவு செய்தும் சேர வேண்டி வரும். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். வீண்வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். சம்பள விஷயத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம்.

அரசியல்வாதிகளே! உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள்.

விவசாயிகளே! வரப்புத் தகராறு, வாய்க்கால் சண்டை என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். நவீன ரக உரங்களைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப்பாருங்கள். இந்தப் புத்தாண்டு புதிய படிப்பினைகளை தருவதாகவும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் கொஞ்சம் நெளிவு, சுளிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்:காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசியுங்கள். கோயில் உழவாரப்பணியில் ஈடுபடுங்கள்.