தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – மீனம்

1937

அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், தனக்கென ஒரு பிரச்னை வந்தால் தடுமாறுவீர்கள். உங்களுடைய முயற்சிஸ்தானமான 3வது ராசியில் இந்த 2018ம் ஆண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சாதூர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகவார்கள்.

வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். இந்த ஆண்டு முழுக்க ராகு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பொறுப்பில்லாத் தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீக சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வது நல்லதல்ல. கேது உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் அமர்வதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களுக்காக எவ்வளவு செய்தும் நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும்.

பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் ராசிநாதனும் உத்யோகஸ்தானாதிபதியாகிய குருபகவான் 8ம் வீட்டில் நிற்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும் என்றாலும் திடீர் பணவரவும் உண்டு.

சொந்தபந்தங்களுக்காக சில சமயங்களில் அலைய வேண்டி வரும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 9ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அலைந்தீர்களே, கவலை வேண்டாம் அழகான வாரிசு உண்டாகும். செவ்வாய் 8ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். சொத்து விஷயங்களை சுமுகமாக பேசித் தீர்க்கப் பாருங்கள்.

இந்தாண்டு முழுக்க உங்கள் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனிபகவான் 10ல் தொடர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். நட்பு வட்டம் விரியும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பொது விழாக்களை தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

தந்தைவழியில் அனுகூலம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 13.01.2018 வரை உள்ள காலக்கட்டங்களில் சூரியனுடன் சனியும் சேர்ந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அலுவலகத்தில் அவ்வப்போது தொந்தரவுகள் வந்து நீங்கியபடியே இருக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் உத்யோகத்தில் மரியாதை குறைவான சம்பவங்கள் நிகழக் கூடும். மேல் அதிகாரியுடன் பணிப்போர் வந்து நீங்கும்.

02.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் இணைந்திருப்பதால் இக்காலக்கட்டங்களில் வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.

வி.ஐ.பிகள்,தொழிலதிபர்களின் நட்பை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். 5.7.2018 முதல் 1.8.2018 வரை சுக்ரன் 6ல் நிற்பதால் சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். குடிநீர், கழிவு நீர் குழாய் அடைப்பு வரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சளித்தொந்தரவு இருக்கும். சைனஸ் இருப்பதைப் போன்ற லேசாக தலை வலி வந்துப் போகும்.

வியாபாரிகளே! முன்பு இருந்த போராட்டம், தடைகள் நீங்கி இப்போது மனநிறைவுடன் காணப்படுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக செயல்படுவீர்கள். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும்.

தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி அதிக லாபம் ஈட்டுவீர்கள். உணவு,ஷேர், சிமெண்ட், செங்கல்,ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சனை தந்த பங்குதாரரை மாற்றுவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! அதிகாரிகளால் பந்தாடப்பட்டீர்களே! செல்வாக்கு இருந்தும் நீங்கள் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமல் திண்டாடினீர்களே! மாற்றம் வரும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. மேலதிகாரியிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி நட்புறவாடுவீர்கள்.

உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலக சூட்சுமங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணினி துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரும்.

கன்னிப்பெண்களே! வெலுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்தீர்களே, இனி அந்த அவல நிலை மாறும். காதல் கைகூடும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். நினைத்தபடி உயர்கல்வியை தொடர்வீர்கள். கலை,இலக்கியத்தில்,இசையில் ஆர்வம் பிறக்கும். மாதவிடாய்க் கோளாறு, தொண்டை வலி, சளித்தொந்தரவு நீங்கும்.

மாணவர்களே! சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாலையில் எழுந்து படியுங்கள். நினைவாற்றல் பெருகும். கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! பதவி உயர்வு உண்டு. மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினர்களே! அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

விவசாயிகளே! வங்கிக் கடன் கிடைக்கும். காய், கனி, கிழங்கு வகைகளால் லாபம் பெருகும். இந்தப்புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை ஏமாற்றினாலும், மையப் பகுதியிலிருந்து உங்களை ஏற்றத்தில் உயர்த்தி விடுவதாக அமையும்.

பரிகாரம்:சென்னை – குன்றத்தூர் முருகப்பெருமானை தரிசியுங்கள். புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள்.