இளம் பெண்
தமிழகத்தில் இரண்டு நாட்களில் திருமணம் இருக்கும் நிலையில், இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சின்னய்யா. இவருக்கு ரம்யா(19) என்ற மகள் உள்ளார். ரம்யாவிற்கும், தாய்மாமனுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் பேசி முடித்துள்ளனர். இந்த கல்யாணம் குறித்து ரம்யாவிடம் கேட்ட போது அவர் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பெற்றோர் உங்கள் முடிவு தான் என்று கூறியுள்ளார்.
கல்யாணம் நாளை மறுநாள் முடிவு செய்யப்பட்டிருந்ததால், நேற்று மாலை திருமணத்திற்கு உடை எடுப்பதற்காக வீட்டில் எல்லோரும் கிளம்பிய போது, ரம்யாவை அழைத்துள்ளனர். ஆனால் ரம்யாவோ நான் வரவில்லை, நீங்கள் போய்ட்டு வந்துடுங்க என்று கூறியுள்ளார்.
அதற்கு தந்தை சின்னய்யா நீ தான் கல்யாண பெண், உனக்கு தேவையானதை நீ தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூற, அதற்கு ரம்யா சிரித்தபடியே எனக்கு என்ன வேணும்னு நீங்களே முடிவு செய்து எடுத்துட்டு வாங்க என்று சொன்னதால், சின்னய்யா தன் குடும்பத்தினருடன் ஜவுளி கடைக்கு சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து சின்னய்யா மட்டும் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு வீட்டின் உள்ளே பூட்டப்பட்ட நிலையில் வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அலறியுள்ளார்.
அதன் பின் உறவினர்களுக்கு தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து ரம்யாவை கட்டிப் பிடித்து கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவர உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிரித்த படி பெற்றோரை வழியனுப்பி வைத்த ரம்யா திடீரென்று தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் இருக்கும் என்று பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.