கெளசல்யா
சக்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள கெளசல்யா அது குறித்து விரிவாக பிபிசி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கெளசல்யா, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக பாரம்பரிய கலையான பறை இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் மறுமணம் குறித்தும் அது சம்மந்தமாக வரும் விமர்சனங்கள் குறித்தும் கெளசல்யா பிபிசி பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், 2016ஆம் ஆண்டு பறையிசை நிகழ்வு ஒன்றில் பறை கற்றுக் கொள்வதற்காக சென்றபோது முதல் முறையாக சக்தியை சந்தித்தேன்.
அவரும் சமூகப்பணியில் ஈடுபட்டிருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நாங்கள் திருமணம் செய்யும் முடிவினை எடுத்தோம். உடனையே சங்கரின் சகோதரர்களை பார்த்து பேசிய நிலையில், அவர்கள் எங்களுக்கு முழு ஆதரவு அளித்தார்கள்.
தற்போது திருமணத்துக்கு பின்னர், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எங்களுக்கு நடக்கலாம். எங்கள் பாதுகாப்பு குறித்து சக்தி வீட்டாரும், சங்கர் வீட்டாரும் கவலையில் உள்ளனர்.
மறுமணத்திற்கு பிறகு எவ்வாறு உணர்கிறீர்கள் என கேட்கிறீர்கள்.
அதே மாதிரிதான் உணர்கிறேன். மறுமணம் என் வாழ்க்கையில் நடந்த இன்னொரு நிகழ்வு. தொடர்ந்து சமூகப்பணி செய்வேன்.
என்னை குறித்து பேஸ்புக்கில் விமர்சனங்கள் வருகிறது. அவர்களுக்கு நான் தொடரப் போகும் பணி பதிலளிக்கும். நான் திருமணம் செய்து கொண்டதை என் பெற்றோரிடம் சொல்லவில்லை,
நான் சங்கர் வீட்டில் இருப்பேனே அல்லது சக்தி வீட்டில் இருப்பேனா என கேட்பவர்களுக்கு, சமூகப்பணி எங்கிருக்கிறதோ அங்கு இருப்பேன் என்பது என் பதிலாகும் என கெளசல்யா கூறியுள்ளார்.