கழுத்து நெரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.. தூக்கில் தொங்கிய பெற்றோர் : நடந்தது என்ன?

806

தூக்கில் தொங்கிய பெற்றோர்

சென்னையில் பெற்ற குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரை அடுத்த எழில் நகரைச் சேர்ந்த பாபு(30) என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

பாபு தினமும் குடித்துவிட்டு, தனது மனைவி விமலாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த விமலா, தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் பாபு அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாபுவின் வீடு காலையில் வெகு நேரமாகியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த பொலிசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாபு மற்றும் விமலா இருவரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளனர். மேலும் இவர்களின் குழந்தைகளான கிஷோர்(6), தியா(4) ஆகிய இருவரும் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் படுக்கையில் சடலமாக இருந்தனர். அதன் பின்னர், நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குழந்தைகளை கொன்று விட்டு பாபு, விமலா இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது பாபு மூவரையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்கிற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.