தற்கொலை செய்து கொண்ட தொகுப்பாளினி : வழக்கில் திடீர் திருப்பம்!!

596

ராதிகா கவுசிக்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொகுப்பாளினி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட வழக்கில், அவருடன் பணியாற்றிய ஆண் தொகுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், நொய்டாவில் உள்ள குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து ராதிகா கவுசிக்(25) என்ற தொகுப்பாளினி மரணமடைந்தார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவர், செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து, ராதிகா மரணமடைந்தபோது அவருடன் பணியாற்றும் ஆண் தொகுப்பாளர் ராகுல் அஸ்வாதி உடனிருந்துள்ளார்.

அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது, ராதிகா மது அருந்தியிருந்ததாகவும், போதையில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அச்சமயம் தான் வாஷ்ரூம் சென்றிருந்ததாகவும் கூறினார்.

பின்னர், இந்த மரணம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு காவலர் கூறும்போது ராகுலும், ராதிகாவும் பேசிக்கொண்டிருந்ததை தான் பார்த்ததாகவும், அப்போது திடீரென ராதிகா மாடியில் இருந்து விழுந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் ராதிகாவின் பெற்றோர் கூறுகையில், ‘ராகுல் தான் அவளை தள்ளிவிட்டு கொலை செய்திருக்க வேண்டும். எங்கள் மகளுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. இறப்பதற்கு முந்தைய நாளில் கூட எங்களுடன் நன்றாக தொலைபேசியில் பேசினார்’ என தெரிவித்தனர்.

இதனால் பொலிசாருக்கு ராகுலின் மீது சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் பொலிசார் கைது செய்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராகுலிடம் மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.