23 நாடுகளை சுற்றிய 69 வயது டீக்கடை ஜோடி : வியக்கவைக்கும் சம்பவம்!!

759

வியக்கவைக்கும் சம்பவம்

வாழ்க்கை அழகானது. அதை நாங்கள் அனுபவிக்கிறோம் என கடந்த 12 வருடங்களில் 23 நாடுகளை சுற்றியுள்ள கேரளாவைச் சேர்ந்த ‘டீக்கடை ஜோடி’ உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற டீக்கடையை நடத்தி வருபவர் 69 வயதான விஜயன். இவரது மனைவி மோகனா(67). இவர்களுக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. கொச்சினில் ஏழையாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இந்த உலகை சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதே கனவு என தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதற்கு பணம் ஒரு தடையாக இருந்துள்ளது. 55 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1963 ஆம் ஆண்டு, தெருவில் டீக்கடை ஒன்றை ஆரம்பித்த விஜயன், அதன் மூலம் வரும் பணத்தை தன்னுடைய உலகம் சுற்றும் கனவுக்காக சேர்த்து வைத்தார்.

தங்கள் கடைக்கு ஒரு நாளைக்கு 300 லிருந்து 350 வாடிக்கையாளர்கள் வருவார்கள் எனவும் அதன்மூலம் வரும் வருமானத்தை சேகரித்து விரும்பிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வோம் எனவும் விஜயன் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து விஜயன் கூறுகையில், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, நியூயார்க் உள்ளிட்ட நாடுகள் மிகவும் பிடித்தமானவை எனவும், பிரேசில், அர்ஜெண்டினா, பெரு உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்து சுவீடன், டென்மார்க், ஹோலண்ட், கிரீன்லேண்ட், நார்வே உள்ளிட்ட நாடுகள் சுற்றிப்பார்க்க வேண்டும்.

எங்கள் டீக்கடை சுவர் முழுவதும் பல்வேறு நாடுகள் குறித்த போஸ்டர்கள் தான் இருக்கும் எனவும் தெரிவிக்கிறார். இவ்வாறு உலக நாடுகளை சுற்றுவதன்மூலம் தங்களுடையை எண்ணங்களும் கலாச்சாரங்களும் மாற்றமடையும் என கூறுகிறார் விஜயன்.

மேலும் பல்வேறு நாடுகளின் டொலர்களை சேகரித்து வைத்துள்ளார். டீக்கடையின் ஒற்றை வருமானத்தை வைத்து கடந்த 12 வருடங்களில் இதுவரை 23 நாடுகள் சுற்றியுள்ளனர் விஜயன் மோகனா தம்பதியினர்.

தற்போது அர்ஜெண்டினா, பெரு, பிரேசில் நாடுகளை சுற்றிப்பார்த்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள இவர்கள் நீண்டகால கனவு நிறைவு பெற்றுள்ளது என குறிப்பிடுகின்றனர். மேலும் தங்கள் டீக்கடையில் வேறு யாரையும் பணியமர்த்தவில்லை எனவும் நாங்களே மேனேஜர், நாங்களே வேலையாட்கள் என பெருமையுடன் கூறுகின்றனர்.

மேலும் பயணம் மேற்கொள்ள பணம் போதவில்லை என்றால் வங்கியில் கடன் வாங்குவோம் எனவும் பயணம் சென்று வந்த பின்பு அந்த பணத்தை 3 வருடத்திற்குள் அடைத்துவிட்டு அதன்பின்பு அடுத்த பயணத்திற்கு திட்டமிட்டு பயணிப்போம் என தெரிவிக்கின்றனர்.