திருநாவுக்கரசு நாடகம் அம்பலம்
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல், வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என எழுத்து பூர்வமாக விளக்கமளித்துள்ளதாக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி காவல் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மயூரா ஜெயக்குமார், திருநாவுக்கரசு சிபிசிஐடி காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் பிப்ரவரி 12 ஆம் திகதி கோவை காங்கிரஸ் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு வந்ததாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவராக பதவியேற்ற பின் கோவை வந்த அன்று, கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திக்கவில்லை. திருநாவுக்கரசு யார் என்றே எனக்கு தெரியாது. நேரடியாகவோ, தொலைபேசியிலோ எந்த தொடர்பும் இல்லை என மயூரா ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
மேலும், பொள்ளாச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவருடன் திருநாவுக்கரசு வந்ததாக கூறியதால், திருநாவுக்கரசு காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தாரா, இல்லையா என்பதை மட்டுமே சிபிசிஐடியினர் கேட்டனர். சம்மன் அனுப்பபட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல. நான் சாட்சி மட்டுமே.
திருநாவுக்கரசு எந்த இடத்திலும் எனக்கு அவருடன், தொடர்பிருப்பதாக சொல்லவில்லை. திருநாவுக்கரசை காப்பாற்ற வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை. திருநாவுக்கரசிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.