காதலனுக்கு எதிராக கூலிப்படையை ஏவிய டென்னிஸ் நட்சத்திரம் : கைதுசெய்த போலீசார்!!

618

வாசவி கணேசன்

ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மொபைலில் இருந்து அழிக்க மறுப்பு தெரிவித்த காதலனுக்கு எதிராக கூலிப்படையை ஏவிய முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் கைது.

அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் முன்னாள் தேசிய 14 வயதுக்கு உட்பட்ட டென்னிஸ் நட்சத்திரம் வாசவி கணேசன் என்பவரே சென்னை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வயதான வாசவியும் சென்னையில் குடியிருக்கும் நவீத் அகமது பேஸ்புக் மூலம் நட்பாகி பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய வாசவி ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நவீதை சந்தித்து பேசியதாகவும், இருவரும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் புகைப்படம் எடுத்துக்கொண்டதில் வாசவிக்கு உடன்பாடில்லை எனவும், இருவரும் இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நவீத் ஹெல்மெட்டால் வாசவியின் தலையில் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த தமது மொபைல் போனை பறித்துக் கொண்டு மாயமாகியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வாசவி, அந்த மொபைலை திரும்ப பெறவும், நவீதை தண்டிப்பதற்காகவும் நண்பர்கள் குழு ஒன்றிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனையடுத்து வேளச்சேரி பகுதியில் உள்ள கணேசன், பாட்சா, பாஸ்கர் உள்ளிட்ட கும்பல் ஒன்று நவீதை கடத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளது.

மட்டுமின்றி நவீதிடம் இருந்து மொபைலை பறித்த அந்த கும்பல், அவரை விடுவிக்க 2 லட்சம் பணம் கேட்டு அவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தது. ஆனால் பணம் கிடைக்கவில்லை என்பதால் நவீதை விட்டுவிட்டு அந்த கும்பல் தலைமறைவாகியுள்ளது.

இதனையடுத்து நவீத் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பேர் கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வாசவி தொடர்பில் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து வாசவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.