குழந்தையை அடித்துக்கொன்ற தாய்
சென்னையில் பெற்ற குழந்தையை தாயே கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தாம்பரத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும், ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் 3 வயதில் கிசோர் என்கிற மகன் இருந்தான்.
புவனேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளத்தகாதலாக மாறியிருப்பதை தெரிந்துகொண்ட கார்த்திகேயன், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கார்திகேயனிடம் இருந்து பிரிந்த புவனேஸ்வரி, தன்னுடைய கள்ளக்காதலன் சோமசுந்தரம் மற்றும் மகன் கிசோர் உடன் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்றைக்கு முன்தினம் மாடிப்படியில் இருந்து கிசோர் தவறி விழுந்து இறந்துவிட்டதாக, புவனேஸ்வரி தன்னுடைய சகோதரிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மேலும் தன்னுடைய மகனின் சடலத்தை எடுத்துக்கொண்டு இறுதிச்சடங்கிற்காக அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு புவனேஸ்வரியின் மீது சந்தேகமடைந்த அவருடைய அக்கா, பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் புவனேஸ்வரியையும், சோமசுந்தரத்தையும் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தது முதலே சோமசுந்தரம், கிசோரை அடித்து துன்புறுத்தியதாக அக்கம்பக்கத்தினர் பொலிசாரிடம் புகார் கூறியுள்ளனர்.