இளம்விதவை
இந்தியாவில் தேர்தலில் நின்றதன் மூலம் பிரபலமான இளம் விதவை பெண் தான் போட்டியிட்ட தொகுதியில் தோற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி வைஷாலி (28). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
விவசாயியான சுதாகர் கடந்த 2011ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ரூ.70000 கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்த முடியாமல் உயிரை மாய்த்து கொண்டார் சுதாகர்.
பின்னர் அங்கன்வாடியில் மாதம் ரூ.3500-க்கு வேலை செய்து வந்த வைஷாலிக்கு விதவை பென்ஷனாக ரூ 600 வந்தது. இந்த சொற்ப வருமானத்தில் தான் பிள்ளைகளை கவனித்து வந்தார் வைஷாலி.
இந்நிலையில் இலக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு வைஷாலி பிரமாதமாக பேசினார். இதை பார்த்த பிரஹர் ஜனசக்தி கட்சியின் எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் அவரின் திறமையை பார்த்து வியந்து அவரை மக்களவை தேர்தலில் போட்டியிடுமாறு ஊக்குவித்தார்.
இதையடுத்து யாவட்மால் வாசிம் தொகுதியில் சுயேச்சையாக வைஷாலி போட்டியிட்ட நிலையில் ஓம் பிரகாஷ் அவருக்கு ஆதரவு கொடுத்தார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் வைஷாலி தோல்வியை தழுவியுள்ளார். ஆனாலும் அவர் 19,918 வாக்குகளை பெற்று அசத்தியுள்ளார்.
இந்த தோல்வியால் அவர் துவண்டுவிடவில்லை. இது குறித்து வைஷாலி கூறுகையில், என் தொகுதிக்கு உட்பட்ட 2000 கிராமத்தை சேர்ந்த மக்களையும் என்னால் சென்று பார்க்கமுடியவில்லை. இதற்கு காரணம் தேவையான பணபலமும் மக்கள் பலமும் என்னிடம் இல்லாதது தான். அடுத்த முறை மீண்டும் நிச்சயம் முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.