அன்று வீடில்லாமல் சாலையில் வசித்தேன்.. என் மீது சிறுநீர் கழித்தார்கள்.. இன்று சோதனையை சாதனையாக்கிய இளம்பெண்!!

948

சோதனையை சாதனையாக்கிய இளம்பெண்

வேல்ஸை சேர்ந்த பெண் வீடில்லாமல் சாலையில் வசித்து பல்வேறு இன்னல்களை சந்தித்த நிலையில் இன்று லண்டன் தீயணைப்பு துறையில் துணை உதவி ஆணையராக உயர்ந்து சாதனை படைத்துள்ளார்.

சப்ரினா கோஹின் ஹட்டன் என்ற பெண் தனது பெற்றோருடன் சிறுவயதில் இருந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் 15 வயதில் அவருக்கு சோதனை ஏற்பட்டது. சப்ரினாவின் தந்தை திடீரென உயிரிழந்த நிலையில் சப்ரினாவுக்கும், அவர் தாய்க்கும் அந்த நிகழ்வு பேரிடியாக அமைந்தது.

அதன்பின்னர் பல்வேறு துன்பங்களை வாழ்க்கையில் அனுபவித்து இன்று தீயணைப்பு துறையில் துணை உதவி ஆணையராக சப்ரினா உயர்ந்துள்ளார். இது குறித்து சப்ரினா கூறுகையில், என் 15 வயதில் தந்தையை பறிகொடுத்தேன், இதன்பின்னர் நாங்கள் வசித்து வந்த வீட்டை இழந்து சாலைக்கு வந்தோம்.

அந்த கடினமான சூழ்நிலையிலும் நான் கல்வி கற்பதை நிறுத்தவில்லை. ஒரு சமயம் ஆட்கள் இல்லாத பாழடைந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன். காலை தூங்கி எழுந்த போது யாரோ என் மீது சிறுநீர் கழித்தார்கள். வீடில்லாத சூழலால் இது போல பல மோசமான விடயங்களை சந்தித்தேன்.

அப்போது தான் பிரச்சனையில் சிக்குபவர்களுக்கு உதவும் பணியை செய்ய வேண்டும் என உறுதி எடுத்து கொண்டேன், அதன்படி 18 வயதில் தீயணைப்பு துறையில் வேலைக்கு சேர்ந்தேன்.

உடன் பட்டப்படிப்பும் படித்து வந்தேன், கடினமான முயற்சியின் காரணமாக பிஎச்டி படிப்பையும் முடித்துள்ளேன். தற்போது தீயணைப்பு துறையில் துணை உதவி ஆணையராக உள்ளேன்.

தீயணைப்பு துறையிலேயே பணிபுரியும் ஒரு நபருடன் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டது. இதன்பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என கூறியுள்ளார்.