வேலைக்கு போகச்சொன்ன மனைவியை குத்திக்கொன்ற கணவன் : இப்படியும் ஓர் சம்பவம்!!

645

மனைவியை குத்திக்கொன்ற கணவன்

தமிழகத்தில் மனைவி வேலைக்கு போக சொன்னதால் ஆத்திரமடைந்த கணவன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ளது சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கட்டடக் கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் திகதி கோவில்பட்டியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

தற்போது சண்முகப்பிரியா கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் நேற்று வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததால், அருகில் இருந்த மாரியப்பன் சகோதரி காளியம்மாள் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

ஆனால் கதவை திறக்காததால், வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அதில் சண்முக பிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதில் மாரியப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் இருந்த மாரியப்பனிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், என் மனைவி என்னை வேலைக்குப் போகச் சொல்லி தொந்தரவு கொடுத்து வந்தார். நேற்று இரவிலும் இதே பிரச்னை சம்பந்தமாகச் சண்டை போட்டோம்.

அந்தத் தகராறில் பழங்கள் வெட்ட வைத்திருந்த கத்தியால் மனைவி சண்முகப்பிரியாவைக் குத்திக் கொலை செய்தேன். ஆத்திரத்தில் குத்தியதில் அவள் இறந்துபோனதும் ரொம்ப அழுதேன். என்ன செய்வதுன்னு தெரியாமல் நானும் கத்தியால் கையிலும் கழுத்திலும் கீறினேன். கொஞ்ச நேரத்துல மயக்கமடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மாரியப்பனுக்கு அப்பா, அம்மா கிடையாது. அவருடைய அக்கா தான் அவரை கவனித்து வந்துள்ளார். கொத்தனார் வேலைக்கு செல்லும் மாரியப்பன் தொடர்ந்து வேலைக்கு செல்வதில்லை, இதனால் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு வந்து, திருந்திடுவான் வேலைக்கு செல்வான் என்று நினைத்து திருமணம் செய்து வைக்க, அது கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.