தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற தாய் : ஆற்றில் புதைத்த காதலனிடம் விசாரணை!!

612

குழந்தையை கொன்ற தாய்

தமிழகத்தில் முறைதவறிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை, தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், சிப்காட் வ.உ.சி நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்பவருக்கும் வாலாஜா அடுத்த வன்னிவேடை சேர்ந்த காவ்யா(25) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

குடும்பத்தகராறு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு காவ்யா, கணவரை பிரிந்து 4 வயது குழந்தையுடன் வெளியேறி வாலாஜா, பெல்லியப்பா நகரில் வாடகை வீட்டில் வசித்துள்ளார்.

அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தருண் யுகேஜி படித்து வந்தான். அப்போது, காவ்யாவிற்கும், ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த தியாகராஜன்(30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி தெரியவரவே ராமச்சந்திரன் காவ்யாவிடம் சென்று மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு வந்தார். ஆனால், காவ்யா, மறுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 13 ஆம் திகதி காவ்யாவிற்கும், தியாகராஜனுக்கும் இடையே, ராமச்சந்திரன் அடிக்கடி வந்து தகராறு செய்வது குறித்தும், குழந்தை தருண் குறித்தும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து குழந்தை தருணை, சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர். பின்னர், பிளாஸ்டிக் தண்ணீர் டேங்கில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தனர். தொடர்ந்து அன்றிரவு 2 மணியளவில் குழந்தையின் சடலத்தை ஆற்காடு டெல்லிகேட் அருகே உள்ள பாலாற்றில் புதைத்தனர்.

மறுநாள் காலை காவ்யாவின் வீட்டிற்கு வந்த அவரது அக்கா அஜந்தா, குழந்தை தருண் குறித்து கேட்டுள்ளார். அதற்கு, காவ்யா முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். தீவிரமாக விசாரிக்கவே, குழந்தையை கொன்று புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில், வாலாஜா பொலிசார் நேற்று முன்தினம் காவ்யாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தமது காதலுக்கு இடையூறாக இருந்ததால் தியாகராஜனுடன் சேர்ந்து குழந்தை தருணை கொலை செய்ததாக கூறி, புதைத்த இடத்தை பொலிசாரிடம் காவ்யா அடையாளம் காட்டினார்.

இதையடுத்து தருணின் சடலத்தை வெளியே எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். காவ்யாவை பொலிசார் கைது செய்தனர். தியாகராஜனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.