மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

656

நெஞ்சை உருக்கும் சம்பவம்

தமிழகத்தில் தன் மனைவி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரைத் தேடி 300 கி.மீ பயணம் செய்த கணவரின் செயல் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் கும்பகோணம் அருகேயுள்ள பெரிங்காடி பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான வினயராஜ். இவர் தமது மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினருடன் கோயம்புத்தூர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார்.

கடந்த மார்ச் 3 ஆம் திகதி இருவரும் தங்களின் மகளை கோவை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு, காரில் நரசிம்மநாயக்கன்பாளையம் திரும்பியுள்ளனர். காரை வினயராஜ் ஓட்டியுள்ளார். நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகே பகவான் கார்டன் நோக்கிச் செல்ல காரை வலது பக்கமாக திருப்பியபோது, மேட்டுப்பாளையத்திலிருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரி, கார் மீது மோதியுள்ளது.

இதில், கார் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. மட்டுமின்றி சாந்தி சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். வினயராஜ் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். மனைவியின் மரணச் செய்தி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியது. மனைவி உயிரிழந்ததால் அவர் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளார். மன நலம் பாதித்திருந்த அவர் தன் மனைவி இறக்கவில்லை; அவரை தேடிச் செல்கிறேன் எனக் கூறிக்கொண்டே இருந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த 7 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய வினயராஜ் மனைவியைத் தேடிச் சென்றுள்ளார். இவர் காணாமல் போனதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இறந்த சாந்தியின் செல்போனுக்கு சமீபத்தில் ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் மறுபுறம் பேசியவர் காணாமல் போன வினயராஜ்.

போனிலும் மனைவியை விசாரித்துள்ளார். அப்போதுதான் அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. அவர் போன் செய்த நம்பரை வைத்து காவல்துறையின் உதவியுடன் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 7 ஆம் திகதி குடியிருப்பில் இருந்து கையில் பணம், செல்போன் என எதையும் எடுக்காமல் சென்ற வினயராஜ், 300 கி.மீ தூரம் நடந்தே தனது சொந்த ஊரான கும்பகோணம் சென்றுள்ளார்.

அங்கு ஒரு தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சாரதியிடம், மனைவியைத் தேடி வந்துள்ளேன். அவளுக்குப் போன் பண்ண வேண்டும் எனக் கூறி அவரது போனை வாங்கி மனைவி நம்பருக்குப் போன் செய்துள்ளார். ஞாபக சக்தியை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய பின்பும், மனைவியின் போன் நம்பரைச் சரியாக ஞாபகம் வைத்து அவர் போன் செய்ததே அவரை மீண்டும் கண்டுபிடிக்க உதவியுள்ளது. மனைவியின் மீதுள்ள பாசத்தில் அவர் 300 கி.மீ பயணம் செய்த சம்பவம் அறிந்த அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.