கனடாவில் இந்திய இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

317

இளம்பெண்

கனடாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு உதவியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி (19) கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் திகதி வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றவர் அதற்குப்பின் வீடு திரும்பவில்லை.

பின்னர் எரிந்த நிலையில் இருந்த அவரது காருக்குள் உயிரற்ற நிலையில் தேசியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில், பொலிசார், தேசி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக மே மாதம் 10ஆம் திகதி ஹர்ஜோத் சிங் டியோ (21) என்பவர் பொலிசாரிடம் சிக்கினார். ஹர்ஜோத் சிங் டியோவும் பவ்கிரண் தேசியும் காதலித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஹர்ஜோத் சிங் டியோவின் தாயாகிய Manjit Kaur Deo (53), கிரண் தேசியின் கொலைக்கு உதவியதாக கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஹர்ஜோத் சிங் டியோவின் சகோதரியும் Manjit Kaur Deoவின் மகளுமான Inderdeep Kaur Deo, (23) என்பவரும் கைது செய்யப்பட்டார். அதன் பின்னரும் மேலும் சிலருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பது தங்களுக்கு தெரியும் என்றும், அவர்கள் தாங்களாகவே வந்து சரணடையுமாறும் பொலிசார் கோரியிருந்தனர்.

இந்நிலையில் மேலும் இருவர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் Gurvinder Singh Deo (25) மற்றும் Talwinder Singh Khun Khun (22) என நீதிமன்ற ஆவணங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த இருவர் மீதும், கொலைக்குப் பின் கொலையாளிக்கு உதவியது மற்றும் இறந்த உடல் ஒன்றை தகாத முறையில் நடத்தியது ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பல ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை, மற்றும் பல அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளான தேசிக்கு, இறப்பதற்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.