சாதிக்கத் துடிக்கும் மாணவியின் பரிதாப நிலை!!

630

மாணவியின் பரிதாப நிலை

தமிழகத்தை சேர்ந்த நாடோடி இன மாணவி ஒருவர் நிரந்திர இடம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வரும் நிலையிலும் தனது படிப்பை தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

நாகர்கோவிலை அடுத்த வெள்ளிச்சந்தை புளியமூட்டில் கொட்டகை அமைத்து நாடோடிக் குடும்பங்கள் வசித்துவருகின்றன.

இந்நிலையில் வெள்ளிச்சந்தையில் வசித்த இரண்டு நாடோடிக் குடும்பங்களில் உள்ள ஐந்து குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மதாஸ். அப்படிச் சேர்த்த பிள்ளைகளில் ஒருவர்தான் கங்கா. அவர் தற்போது பி.எஸ்சி படிக்கிறார்.

கங்கா கூறுகையில், என் பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள், ஊர் ஊராகப் போய் குடை தைப்பது, செருப்பு தைப்பதுதான் அவர்களின் தொழில். அப்படி வெள்ளிச்சந்தை ஊரில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த போது பத்மதாஸ் என்னையும் என் அண்ணன் மற்றும் மூணு பிள்ளைங்களையும் அங்கிருந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார்.

மற்ற மூணு பேர் படிப்பைப் பாதியிலே நிறுத்திய நிலையில் என் அண்ணன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்ததால் படிப்பை நிறுத்திவிட்டான். நான் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன், தற்போது நான் பிஎஸ்சி படித்து வருகிறேன், கூடாரத்தில் விளக்குகள் இல்லாததால் மெழுகுவத்தி வெளிச்சத்தில் தான் படிப்பேன்.

மழை வந்தால் கூடாரம் ஒழுகும். அதனால கடைப் பக்கம் போய் படுப்போம். விடிந்ததும் 6 மணிக்குக் கடை திறக்க ஆள்கள் வருவார்கள். முதலில் அப்பாவை எழுப்புவார்கள். அதன்பின்பு, நாங்கள் எழுந்துகொள்வோம். அப்படி எழுப்புவது எனக்கு அவமானமாக இருக்கும்.

கூடாரத்துக்கு வந்து பல முறை அழுதிருக்கிறேன். அது போக, நான் பெரிய பெண்ணாக ஆகிவிட்டதால் கடை முன்னாடி படுக்க சங்கடமாக இருக்கும். அதனால் அங்கு போய் இப்போதெல்லாம் படுப்பதில்லை, படித்து முடித்த பின்னர் வங்கி பணியில் சேர வேண்டும் என்பதே என் கனவு என கூறியுள்ளார்.