கடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம் : விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்!!

778

பயணிகள் விமானம்

புயலின் போது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம் தொடர்பில், விமானியின் மொபைலில் பதிவான காணொளி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மைக்ரோனேசியாவில் இருக்கும் சூக் தீவில் அமைந்துள்ள விமான நிலையத்தில், பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள நீர்ப்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

போன்பேய் விமான நிலையத்தில் இருந்து பப்புவா நியூ கினியாவுக்குச் செல்லும் வழியில், ஏர் நியூகினி விமானம் வெனோ தீவில் உள்ள சூக் விமான நிலையத்தில் நின்று செல்லும்.

குறித்த விமானத்தில் 35 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் உள்ளிட்ட 47 பேர் பயணித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக நடந்த இந்த விபத்தில் யாருக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால், பயணி ஒருவர் இந்த விபத்தில் சிக்கி மரணமடைந்தது மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணிகளில் தெரியவந்தது.

ஓடுதளத்துக்கு 1,500 அடிக்கு மேலே இந்த விமானம் தரையிறங்க முயன்றது எப்படி, இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என பப்புவா நியூ கினியா விசாரணை ஆணையம் ஒன்று அமைத்து விசாரித்து வந்தது.

இதில் விமானிகளின் அலட்சியம்தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. மட்டுமின்றி 17 முறை கணினிகளால் தெளிவான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் விபத்துக்கு முக்கிய காரணம் எனவும் தெரியவந்தது.

52 வயதான விமானியின் கீழ்தான் விபத்துக்குள்ளான இந்த விமானம் இயக்கப்பட்டது. அவருக்கு 20,000 மணிநேரத்துக்கு மேலான விமானம் ஓட்டும் அனுபவம் இருந்திருக்கிறது.

ஆனாலும், அந்த வானிலையில் நிதானமில்லாத தரையிறங்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். First officer-ஆக இருந்தவரும் ஆபத்தை உணர்ந்து அவரை எச்சரிக்க தவறியிருக்கிறார்.

விபத்துக்கு முன்பு விமான காக்-பிட்டில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை விமானி ஒருவர் வீடியோவாகப் படம்பிடித்திருந்தார். காக்-பிட்டில் கமெரா வைப்பது தங்களது கவனத்தை சிதறடிக்கும் என்று கூறும் விமானிகளே இப்படி வீடியோ எடுக்கலாமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இந்த விபத்தில் மரணித்த ஒருவரும், சீட் பெல்ட் அணியாததால் ஏற்பட்ட மோதலில் உண்டான காயத்தின் காரணமாகத்தான் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.