ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட 143 செயற்கைக்கோள்கள்..! விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஸ்பேஸ் எக்ஸ் புதிய சாதனை!

442

143 செயற்கைக்கோள்கள்…

ஒரே நேரத்தில் 143 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில், எலான் மஸ்க்கைத் தலைவராகக் கொ ண் ட ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த ஃபால்கன்-9 ராக்கெட், புளோரிடா மாகாணம் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏ வ ப்பட்டது.

ராக்கெட் புறப்பட்ட 9வது நிமிடத்தில் செயற்கைக்கோள்களைத் தாங்கிய இரண்டாம் கட்டம் புவிவட்டப் பாதையை நோக்கிச் செல்ல, முதல்கட்டத்தில் இருந்த பூஸ்டர் பூமிக்குத் திரும்பி அட்லாண்டிக் கடலில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த மிதவையில் தரையிறங்கியது.

இந்த ராக்கெட்டில் செலுத்தப்பட்ட 143 சிறியரக செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இதில் அரசு தொடர்பான மற்றும் வணிகரீதியானவை என 133 செயற்கைக்கோள்களும், 10 ஸ்டார்லிங்க் சாட்டிலைட்களும் அடங்கும்.

12 ஆயிரம் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி சாட்டிலைட் இணையசேவையை வழங்கும் ஸ்டார்லிங்க் திட்டத்தில், ஏற்கனவே 1015 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் மேலும் 10 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இஸ்ரோ நிறுவனம் 2017ம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது. தற்போது, 143 செயற்கைக்கோள்களை செலுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.