கொரோனாவுக்கு பயந்து 15 மாதம் வீட்டிலேயே அடைந்த பெண்கள்: மீட்ட ஊர் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

529

பென்னி…

கொரோனா வைரஸுக்கு பயந்து பெண் ஒருவர் 15 மாதமாக வீட்டை விட்டு வெளியே வராமல் உடல் மெலிந்து மீட்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கதலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பென்னி (50). இவரது மனைவி ருத்ரம்மா. இவர்களுக்கு, இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ஜான் பென்னி, அவரது மகன் அதே கிராமத்தில் சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் கடையை நடத்தி வந்துள்ளனர். இதனிடையே, கடந்த 2019ஆம் வருடம் மார்ச் மாதம் ஜான் பென்னியின் வீட்டு அருகே வசித்து வந்த பெண் ஒருவர் கொரோனவால் இறந்து போயுள்ளார்.

இதனால் பயந்துபோன பென்னியின் குடும்பத்தில் பெண்கள் மட்டும் வீட்டில் இருந்து வெளியே வருவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், உணவு, காய்கறி, மளிகைப் பொருள் மற்றும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கும் வேலைக்கு ஜான் பென்னி மற்றும் அவரது மகன் சின்னபாபு ஆகியோர் வெளியே சென்று வந்துள்ளனர்.

கொரோனா பயத்தில் இவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூட பேசியது கிடையாதாம். இதனைத்தொடர்ந்து, ஜான் பென்னிக்கு முதல்வரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் அவர்களின் வீட்டிற்கு சென்று இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

அப்போது தான் வீட்டில் உள்ள பெண்களின் நிலைமை தெரிய வந்துள்ளது. அதன்பின்னர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்களை மீட்டுள்ளனர்.

சுமார் ஒன்றரை வருடமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த நிலையில், 5 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டுள்ளனர். அவர்களை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றிய அதிகாரிகள், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.

இதில் மூன்று பெண்களும் சூரிய ஒளி உடலில் படாமல் வாழ்ந்த காரணத்தால், வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருப்பதால், மனநிலை மந்தமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.