ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டங்கள் எப்படி இருக்கும்?

1115

சூரியன், புதன் வீடாகிய மிதுன ராசியில் பிரவேசிக்கும் காலம் தான் ஆனி மாதம்.ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டங்கள் எப்படி இருக்கும்? என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் சிறப்பு குணங்கள்:ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு காரியத்தை சாதிப்பதில் வல்லவர்கள். நேர்மை, நியாயம், தர்மம் போன்ற நல்ல குணங்களுடன் வாழும் எண்ணங்களை கொண்டவர்கள்.

நடுநிலை தவறாமை, உதவும் மனப்பான்மை, எதையும் எளிதில் புரிந்து கொள்ளுதல், தந்திரம், கண் பார்த்தால் கை செய்யும் என்ற அளவிற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், நகைச்சுவை உணர்வுகளையும் கொண்டவர்கள்.

ஆழ்ந்த சிந்தனை, அனுபவ ஞானம், கல்வி போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.ஏனெனில் இவர்களுக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகமாக இருக்கும்.

லக்கினம், லக்கினாதிபதி, சந்திரன், புதன் ஆகியவை இவர்களுக்கு பலமாக இருப்பதால், ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும் அதில் வெற்றி அடைவார்கள்.

யோகம்:பணவரவு, செல்வவளம் என்பது அதிகமாக கொட்டினாலும், தட்டுப்பாடுகள் ஏற்பட்டாலும் எதையும் இவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். சிக்கனமும், சேமிப்பும் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டுக் குறிக்கோளுடன் செயல்படுவார்கள். தேவைக்கு செலவு செய்ய தயங்க மாட்டார்கள். ஆனால் வாக்கு என்பது இவர்களுக்கு மிக முக்கியம்.

ருணம், ரோகம் என்பது இவர்களுக்கு பொதுவான அம்சம் என்றாலும், இவர்கள் வாழ்வாதாரம், நல்ல சுபகாரியங்களுக்கு கடனாக பணம் புரட்டினாலும், அதை உரிய காலத்தில் திருப்பி கொடுப்பதில் குறியாக இருப்பார்கள்.

இவர்களுக்கு நேர்முக எதிர்ப்பைவிட மறைமுக எதிர்ப்பு இருக்கும். காரணம் எந்தப் பிரச்னையிலும் அதிகம் ஈடுபட மாட்டார்கள்.

சொத்து சுகம்:ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு விவசாய விளைநிலங்கள், எஸ்டேட், தோட்டம், வீடு, பங்களா, அடுக்குமாடி கட்டிடங்கள், பொன், பொருள், மாமன் வகை உறவுகள் மூலம், உயில் சொத்துக்கள் கிடைக்கும்.

தாய், மனைவி, சகோதரி போன்ற பெண் உறவுகளால் லாபம் அடைவார்கள். புதன், குரு பலமாக இருந்தால், மனைவி மூலம் சீர், வரதட்சணை, அன்பளிப்பு என்று கேட்காமலே இவர்களுக்கு கிடைக்கும்.

நோய்:ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தலைபாரம், சைனஸ், நீர்க் கோத்தல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். ஜீரணக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

குழந்தைகள்:பூர்வ புண்ணிய யோகம் புதன், சுக்கிர பலத்தின் காரணமாக அதிகமாக காணப்படும். அதனால் இவர்களுக்கு பெண் குழந்தைகள் அதிகமாக பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சந்திரன் நல்ல அமைப்பில் ஜாதகத்தில் அமைந்தால், இவர்களுக்கு யோக சித்தி கைகூடும் பாக்கியம் உண்டு.

இவர்கள் குழந்தைகள், பேரப் பிள்ளைகளை தாங்கிப் பிடிப்பார்கள். அதே நேரத்தில் வயோதிக காலத்தில் பிள்ளைகளின் உதவி நிச்சயமாக இருக்கும்.

மனைவி:ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு குரு, சனி, சாதகமாக இருக்கும் பட்சத்தில் கூட்டாளிகள், நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவியால் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள்.

சந்திரன், சுக்கிரன் நல்ல அமைப்பில் இருந்தால், மனைவி மூலம் யோகம், சுக பாக்கியங்களை அடைவார்கள்.இவர்களின் தற்காப்பான வாழ்க்கை நடவடிக்கைகள், சூழ்நிலை அறிந்து செயல்படுவது போன்றவை இவர்களுக்கு இனிய இல்லற சுகத்தை தரும்.

தொழில்:ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், அதில் முதல் நிலைக்கு வந்து விடுவார்கள். தலைமைப் பதவிக்கு வருவதுடன், தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு மதியூக மந்திரியாக, ஆசானாக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர்களாக திகழ்வார்கள்.

நிதித்துறை, நீதித்துறை, வங்கி, நிர்வாகத் தலைமை, ஆசிரியர், விரிவுரையாளர் என்று பல துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். அச்சக தொழில், புத்தகம் வெளியிடுதல், பதிப்பகம் நடத்துதல் போன்ற துறைகளில் கால் பதிக்கும் யோகம் உண்டு.

தொழிலில் ஏற்றுமதி, இறக்குமதி, காய், கனி, பூக்கள், மீன்கள் மற்றும் அழகு பொருட்கள், தண்ணீர் தொடர்பான தொழில்கள் இவர்களுக்கு அதிக லாபம் ஈட்ட கைகொடுக்கும்.