தேவயாணியை திருமணம் செய்ய துடித்த இளவரசர்… ஒரு அரச குடும்பமே கொலைசெய்யப்பட்ட கொடூரம்!!

839

17 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தையே அதிரச் செய்த ஓர் பயங்கர கொலை இது. மகன் அப்பா அம்மா தங்கை, தம்பி உட்பட குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் ஒன்பது பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இது ஒன்றும் எதோ ஒரு கிராமத்தில் அல்லது ஊர் பெயர் தெரியாத இடத்தில் வசிக்கும் குடும்பம் இல்லை. நேபாளத்தின் மன்னராக வாழ்ந்தவர்களின் துயர முடிவு தான் இது. 2001 ஆம் ஆண்டு இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இன்றளவும் நேபாள மக்கள் இந்த படுகொலையை ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அரண்மனையில் 2001 ஆம் ஆண்டு ஜூன் 1 வெள்ளிகிழமை இரவு அரச குடும்பத்தினர் எல்லாம் ஒன்றாக சேர்ந்து அமர்ந்திருந்தார்கள். எல்லாரும் அமைதியாக உட்கார்ந்திருக்க முடி இளவரசர் திபேந்திராவுக்கும் ராணி ஐஸ்வர்யாவுக்கும் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

திபேந்திரா இங்கிலாந்தில் தான் சந்தித்த தேவ்யானி ராணா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்றார். இந்த திருமணத்திற்கு மன்னர் உட்பட யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.

தேவ்யானியை திருமணம் செய்து கொண்டால் அரச குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவாய் என்று மன்னர் பிரேந்திரா சொன்னதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சில மாதங்களாகவே இளவரசருக்கும் மன்னருக்கும் தொடர்ந்து வாக்குவாதங்கள் நடந்து வந்திருக்கின்றன.

சம்பவம் நடந்த அன்றும் தொடர்ந்து வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த இளவரசர் தன் அறைக்கு சென்று ராணுவ உடைக்கு மாறினார்.

கையில் எம்16 ரக பிஸ்டல் துப்பாக்கியுடன் குடும்பத்தினர் உட்கார்ந்திருக்கும் அறைக்கு நுழைந்தவர் திடீரென்று சுட ஆரம்பித்தார். அங்கிருந்த ஒன்பது பேரும் சரிந்து விழுந்தார்கள். சத்தம் கேட்டு காவலர்கள் ஓடிவர இளவரசர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.

அதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் பிறர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கொண்டு செல்ல அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இளவரசர் மட்டும் இரண்டு நாட்கள் தாக்குப்பிடித்தார். இறுதியில் அவரும் இறந்துவிட்டார். ஒரு நொடியில் ஒட்டுமொத்த மன்னர் குடும்பமே இறந்துவிட்டது இறுதி காரியங்கள் செய்வதற்கு கூட அங்கே ரத்த சொந்தம் என்று யாரும் இல்லை.

கடைசியாக இளவரசரின் மாமா ஞானேந்திரா என்பவர் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளை செய்தார்.மன்னரின் மரணம், ஞானேந்திராவின் திடீர் பதவி ஏற்பு ஆகியவை நேபாளத்தில் பெரும் குழப்பதை ஏற்படுத்தின.

அதோடு உலகத்தின் மொத்த கவனமும் அரண்மனையில் படுகொலை செய்யப்பட்ட மன்னர் குடும்பத்தைப் பற்றியே இருந்தது. 1918 ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்கு பிறகு அரண்மனையில் மன்னர் குடும்பத்தில் நடக்கிற படுகொலை சம்பவம் இது. அதிலும் ஒட்டுமொத்த மன்னர் குடும்பமே இறந்துவிட்டது என்பதால் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.

கொன்றது எதிரி நாட்டினர் அல்ல இந்த நாட்டின் இளவரசன் மன்னரின் மகன் அதுவும் துப்பாக்கியில் சுட்டுக் கொன்றிருக்கிறார்.

இது இளவரசரின் தனிப்பட்ட செயல் அல்ல பின்னால் பெரும் அரசியல் இருக்கிறது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை.இதன் பின்னணியில் இருக்கும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்றார்கள் மன்னரின் ஆதரவாளர்கள். நேபாளம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அமைந்திருப்பதால் மன்னரை கொல்ல சர்வதேச அளவில் சதி நடந்திருக்கும் என்றும் பேசப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த சில மாதங்கள் கழித்து நேபாளத்தில் வெளியாகக்கூடிய பத்திரிக்கை ஒன்று இந்த சம்பவம் தொடர்பாக ஒரு செய்தி வெளியிட்டது. அதில் இளவரசருக்கு 35 வயதுக்கு முன்னர் திருமணம் நடந்தால் அரசரும் அவரது குடும்பமும் மரணிக்கும் என்பது விதி என்றது அந்த செய்தி.

வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு வந்ததால் இளவரசர் யாருக்கும் தெரியாமல் தன் காதலி தேவ்யானியுடன் இந்தியா வந்தவர் இந்தியாவில் ஒரு கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

வளர்ந்து வரும் சூழல், மக்கள் புரட்சி, வலுக்கு எதிர்ப்புகள், நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு மன்னராட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் பேசி வந்தார்கள். ஒரு பக்கம் மன்னராட்சிக்கு எதிர்ப்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் மக்கள் மத்தியில் மன்னர் பிரேந்திராவுக்கு நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்தது.

ஆனால் இப்படி ஒரு துர்மரணம் மன்னருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்படும் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

1768 ஆம் ஆண்டு ப்ரித்வி நாராயண் ஷா என்ற கோர்கா அரசரால் உருவாக்கப்பட்டது தான் காத்மாண்டு,பாட்டான் மற்றும் பக்த்பூர் ஆகிய இன்றைய மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஷா வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர்.

1846 முதல் 1951 ஆம் ஆண்டு வரை ராணா வம்சத்திலிருந்து ஒருவர் தான் நேபாளத்தின் பிரதமராக நியமிக்கப்படுவார். இதனால் ஷா வம்சத்தினருக்கும் இவர்களுக்கும் காலங்காலமாக பகையுணர்வு இருந்து வந்திருக்கிறது. தேவ்யானி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததற்கும் இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு நேபாளத்தில் உள் நாட்டு போர் நடந்தது. நேபாளத்தில் வசிக்கும் மாவோயிஸ்டுகள் மன்னராட்சியை கலைத்து மக்கள் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று சொல்லி போராட ஆரம்பித்தார்கள். இடையில் 2001 ஆம் ஆண்டு மன்னர் குடும்பத்திலேயே மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்க இளவரசரனின் மாமா ஞானேந்திரா பதவியேற்றார்.

அப்போதும் மன்னரின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம், மன்னராட்சியை எதிர்க்கும் மாவேயிஸ்டுகள் என பலத்த எதிர்ப்பு வந்ததை அடுத்து 2005 ஆம் ஆண்டு எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது.

2006 ஏப்ரல் 24 ஆம் தேதி லோகந்த்ரா அந்தோலன் என்ற போராட்டம் நடைப்பெற்றது. முடிவாக 2006 நவம்பரில் போராட்டம் முடிவுக்கு வருவதாகவும் மன்னராட்சி முழுவதுமாக கலைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.