மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர் : அனாதையாக கதறிய குழந்தைகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

330

விருதுநகர்..

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (32). இவரது மனைவி கற்பகம் (30). இவர்களுக்கு நிகர்சித்(10), ஹரிஷ்கண்ணன்(2) என்ற குழந்தைகள் உள்ளனர்.

கண்ணன் மதுரை திருமங்கலத்தில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வேலைக்காக தினமும் விருதுநகரில் இருந்து திருமங்கலத்திற்கு கண்ணன் சென்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மனைவி கற்பகத்தின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி கற்பகத்தை கழுத்தை அறுத்துள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

அப்போது கண்ணனின் 2 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. அவர்களை வீட்டிலேயே விட்டு விட்டு கண்ணன் விருதுநகர் ரூரல் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் கண்ணனை கைது செய்தனர்.

நடத்தை சந்தேகத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதில், திருமணமாகி 11 வருடங்கள் கடந்தாலும் மனைவி கற்பகம் மீது கண்ணன் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தார்.

இந்த அன்பு நாளுக்கு நாள் அதிகமானதால் மனைவி தன்னை தவிர எந்த ஒரு ஆணிடமும் பேச்ககூடாது என்ற மனநிலைக்கு கொண்டு வந்துள்ளது. வீட்டிற்கு வரும் பால்கரருடன் பேசினால் கூட ஏன் பேசினாய் எதற்காக பேசினாய் என்று கேள்வி கேட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மனைவிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. அந்த மகன் பிறந்தது முதலே கண்ணனுக்கு மனைவி கற்பகம் மீது சந்தேகம் இன்னும் அதிகரிக்க தொடங்கி கொலையில் முடிந்துள்ளது.

நடத்தை சந்தேகத்தில் மனைவியை வங்கி ஊழியர் கொலை செய்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 2 குழந்தைகளும் யாருடைய ஆதரவு இல்லாமல் அனாதையாக நின்று கண்ணீர் சிந்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.