ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

363

நாமக்கல்….

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் வயக்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி.

இவர் சொந்தமாக தறிப்பட்டறை வைத்துள்ளார். இவருக்கு நீலாம்பாள் என்ற மனைவியும் பிரீத்தி, ஷாலினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

மூத்த மகள் பிரீத்திக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். பெரிய அளவில் தறிப்பட்டறை நடத்தி வந்த இவர், தான் வைத்திருந்த தறிகளில் பாதியை லீசுக்கு விட்டுவிட்டு, மீதியை விற்று, அந்தப் பணத்தை வட்டிக்கு விட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை, பிரீத்தி வெங்கடாசலபதிக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாக போனை எடுக்காததால், தனது சித்தப்பா மகன் சரண் என்பவருக்கு போன் செய்து வீட்டில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.

சரண் வீட்டுக்கு வந்தது பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூடியிருக்கவே, பக்கத்து வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது நீலாம்பாள் தூக்கில் தொங்குவது தெரிந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த சரண், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முன்பக்க கதவை உடைத்து பார்த்தபோது, வெங்கடாசலமும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இரண்டாவது மகள் ஷாலினியை தேடியபோது மொட்டை மாடியிலுள்ள குளியலறையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். மேலே ஒரு கயிறு அறுக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

உடனே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.