தாயை இழந்த 6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிவரும் மருத்துவரின் மனைவி : நெகிழ்ச்சி சம்பவம்!!

562

வேலூர்…

வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்து அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், பிரசவித்த சில மணி நேரத்திலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தாய்ப்பால் இல்லாமல் குழந்தை பரிதவித்து வந்தது. இதனிடையே தந்தையின் அரவணைப்பிலேயே குழந்தை வளர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் வேலூரில் உள்ள அரசு பன்முக கால்நடை மருத்துவமனைக்கு தங்கள் வீட்டில் உள்ள கால்நடைகளை மருத்துவ பரிசோதனைக்காக அந்த விவசாயி அழைத்து வந்துள்ளார்.

அப்போது தன் மனைவி இறந்துவிட்டதையும், குழந்தை தாய்ப்பால் கிடைக்கமால் வளர்வதையும் எண்ணி வேதனையடைந்து, மருத்துவர் ரவிசங்கரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து விவசாயி கூறியவற்றை மருத்துவர் ரவிசங்கர் தனது மனைவி சந்தியாவிடம் கூறியுள்ளார். இதைக் கேள்விப்பட்டதும் மணம் வருந்திய சந்தியா, அந்தக் குழந்தையை நேரில் பார்க்க தனது கணவருடன் சென்றுள்ளார், விவசாயி வீட்டிற்குச் சென்று குழந்தையை பார்த்தபோது, தாய்ப்பால் கிடைக்காததால் குழந்தையின் உடல் எடை மிகவும் குறைவாக இருந்துள்ளது.

இதனால் மேலும் கவலையுற்ற சந்தியா, அந்தக் குழந்தைக்கு தான் தாய்ப்பால் புகட்ட விரும்புவதாக தனது கணவரிடம் தெரிவித்திருக்கிறார். அவரது கணவரும் அதனை வரவேற்று ஊக்குவித்துள்ளார்.

இதனால் கடந்த மூன்று மாதங்களாக வாரம் ஒருமுறை தங்கள் வீடு அமைந்திருக்கும் காட்பாடியிலிந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கீழ் அரசம்பட்டு கிராமத்திற்கு பயணம் செய்து குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வருகிறார்.

குழந்தைகளைப் பெற்ற பெண்கள் தாய்ப்பால் கொடுக்க முனவரவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், சந்தியா தானாக முன்வந்து தாய்ப்பால் தானம் செய்திருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.