காதல் மனைவி மீது சந்தேகம் : ரயில் முன் பாய்ந்து தற்கொலை : மரணத்திற்கு முன் கண்ணீர் வாக்குமூலம்!!

1156

ஆந்திர மாநிலத்தில் மாமியார், மனைவி கொடுமை காரணமாக இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் வியஜவாடா அருகே உள்ள ரயில் நிலையத்தில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், இளைஞரின் உடலை கைப்பற்றி பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது அவரது சட்டைலிருந்து, ஒரு செல்போன் கிடைத்துள்ளது.

அதனை காவல்துறையினர் ஆராயும்பொழுது, அதில் இறுதியாக எடுக்கப்பட்ட செல்பி வீடியோ ஒன்று இருந்துள்ளது.

அந்த வீடியோவில், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய், வேண்டுமென்றே பொய் வழக்கு பதிந்து என்னை காவல்நிலையத்தில் உட்கார வைத்துவிட்டாய் என கூறியதோடு, தன்னுடைய மரணத்திற்கு மனைவி, மாமியார் மற்றும் அவரது சகோதரர்களே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, இந்த மனஅழுத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்களை நீங்களே நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியிருந்தார்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் தீவிரமான விசாரணை மேற்கொள்ளும்பொழுது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாலங்கா பகுதியை சேர்ந்தவர் குருவா ரெட்டி(27). இவரும், அதே பகுதியை சேர்ந்த காயத்ரியும்(25) 10-ம் வகுப்பிலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

10ம் வகுப்பு முடித்த உடனே குருவா தன்னுடைய படிப்பை நிறுத்தியுள்ளார். ஆனால் தொடர்ந்து இன்ஜினீரிங் வரை படித்து வந்த காயத்ரிக்கு பண மற்றும் பொருளுதவி செய்து வந்துள்ளார்.

இதற்கிடையில் இருவரும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இன்ஜினீரிங் முடித்த உடனே ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காயத்திரிக்கு வேலை கிடைத்துள்ளது.

சில நாட்களாகவே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த குருவா, அவர் வேலைக்கு சென்றதும், “Spyhuman” என்ற அப்ளிகேஷன் மூலம் காயத்ரியின் செல்போனை ஆராய்ந்துள்ளார்.

அதில் வேறு ஒருவருடன் மனைவி நெருக்கமாக பேசியிருப்பதை தெரிந்துகொண்ட குருவா, மனைவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி விஜயவாடாவில் உள்ள வீட்டிற்கு வந்த காயத்ரி தனது அம்மா மற்றும் சகோதரருடன் இணைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தார், குருவா மீது புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குருவாவிற்கு சம்மன் அனுப்பியதோடு, அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த குருவா, இறப்பதற்கு முன்னர் செல்பி வீடியோவாக தன்னுடைய மரண வாக்குமூலத்தை கொடுத்துவிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதால்,காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்