இந்தியாவை உலுக்கிய 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கடைசியாக ஒருவர் மட்டும் தப்பிக்க போராடியதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் சமீபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 11 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அனைவரது கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில், வழக்கு குறித்து பொலிசார் விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டுக்குள்ளேயே கோயிலை கட்டி வழிபாடு செய்து வந்ததும், மோட்சம் அடைவதற்காக இவ்வாறு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதவிர டைரியின் மரண குறிப்புகள், 11 குழாய்கள் என பல தகவல்கள் வெளியாகி பொலிசாரை குழப்பத்தில் ஆழ்த்தின.
இதனை தொடர்ந்து லலித் சுண்டவத் என்பவர் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது, 10 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த தந்தை உயிரோடு இருப்பதாக எண்ணி வாழ்ந்து வந்ததும், சொர்க்கத்தை அடைய தற்கொலை தான் வழி என குடும்பத்தாருக்கு தெரிவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் 130 பேரிடம் விசாரணை நடத்தியதில், அந்த 11 பேரில் புவனேஷ் என்பவர் மட்டும் கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடி இருக்கிறார் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது ஒரு கை, கழுத்தில் மாட்டியிருந்த கயிற்றை பிடித்து இழுப்பது போன்று இருந்தது, கைகளிலும் கயிறுகள் இறுக்கமாக கட்டப்படவில்லை, எனவே கடைசி நேரத்தில் தப்பிக்க போராடி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.