ஆண்டுக்கு ஒரு தடவை காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்

2037

முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லி தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன.

அவற்றில் ஒரு கோயில்தான் இந்த முருகன் கோயில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக இந்த கோயில் எந்தவித சேதமும் இன்றி நிலைத்து நிற்பதன் அதிசயத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி பகுதியில் உள்ள துணைக்காயம் எனும் இடம்வரை பயணிக்கிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள இந்த முருகன் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் உள்ள குறுக்கு துறை எனும் பகுதியில் இந்த முருகன் அமைக்கப்பட்டதால் இந்த கோயில் குறுக்குத்துறை முருகன் கோயில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

ஆற்றுக்கு நடுவே இந்த கோயில் அமைப்பதால் எப்பேர்ப்பட்ட வெள்ளம் வந்தாலும் சேதங்கள் ஏற்படாத வண்ணம் தெள்ள தெளிவான திட்டமிடலுடன் அந்தக்காலத்தில் கட்டப்பட்டதுதான் இந்த முருகன் ஆலயம்.

இந்த கோயிலின் பிரதான தெய்வமான முருகன் இங்கு சுயம்புவாக தோன்றியதால்தான் அவர் தோன்றிய இடத்திலேயே இந்த கோயில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் இந்த கோயில் நீரால் மூழ்குவது வாடிக்கையான விடயம். வெள்ளப்பெருக்கு சமயங்களில் சுமார் 40000 கன அடி தண்ணீர் ஆற்றில் உருண்டோடுகிறது. ஆகவே அந்த வெள்ள சமயங்களில் உற்சவர் சிலை மற்றும் உண்டியல் மட்டும் கரையிலிருக்கும் மேல்கோயிலில் கொண்டு வந்து வைக்கப்படுகிறது.

மூலவர் அத்தனை வெள்ளத்திலும் அங்கேயேதான் இருப்பார்.வெள்ளம் வடிந்தபின் கோயிலை சுத்தம் செய்து பின் உற்சவர் சிலையை கொண்டு வந்து வைப்பார்கள். எப்பேர்ப்பட்ட வெள்ளத்தையும் சமாளிக்க காரணமாக இருப்பது இந்த கோயிலின் வடிவமைப்புதான்.

படகின் முன்பகுதி நீரை கிழித்து செல்லும் வகையில் கூர்மையாக இருக்கும். அதேபோல இந்த கோயிலின் முன்பகுதி படகு போன்ற வடிவமைப்புடன் கூர்மையான முனையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் வருகையில் இந்த முனை பொங்கி வரும் நீரை கிழித்தபடி நிலையாக நிற்கிறது.

எத்தகைய வெள்ளத்தையும் தாங்கும் இந்த கோயிலும் அதன் மூலவரும் ஆச்சர்யத்தின் உச்சம்தான். நவீன பொறியாளர்கள் கூட இந்த கட்டுமானத்தை கண்டு ப்ரம்மித்து போவதாக கூறுகின்றனர்.

இந்த முருகனிடம் பக்தியோடு மனமுருக நாம் வேண்டி வந்தால் வாழ்வில் நாம் எத்தகைய இடர்களையும் சமாளித்து முன்னேறும் பலத்தையும் அதிர்ஷ்டங்களையும் இந்த முருகன் வாரி வழங்குவதாக சொல்கிறார்கள்.