தந்தையின் கண்முன்னே வாலிபரை வெட்டி சாய்த்த பெற்றோர் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

315

தெலுங்கானா…..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம் பஜார் பகுதியில் உள்ள கோல்சவாடியை சேர்ந்த நீரஜ் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா (20) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை மாத கை குழந்தையும் உள்ளது. நீரஜ் குமார் தனது தந்தையுடன் பேகம் பஜார் பகுதியில் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடையை மூடிவிட்டு, நீரஜ் குமார் தனது தந்தை ராஜேந்தர் பன்வாருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, நீரஜ் குமார் மனைவியின் உறவினர்கள் எனக்கூறி, மர்ம நபர்கள் அவரை கிரானைட் கல்லால் பின்னால் இருந்து தாக்கியுள்ளனர்.

இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த நீரஜை தந்தையின் கண்முன்னே தேங்காய் வெட்டப் பயன்படும் அரிவாளால் சரமாரியாக குத்திவிட்டு அந்த கும்பல் தப்பியது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த நீரஜை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மர்ம கும்பலை தேடும் பணியை முடுக்கியுள்ளனர்.

மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நீரஜ் சஞ்சனாவை கலப்பு திருமணம் செய்துகொண்டது இக்கொலையின் பின்னணியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

”கொலையாளிகள் கடந்த 6 மாதங்களாக நீரஜுக்கு ஸ்கெட்ச் போட்டு வந்துள்ளனர்… ஒரு வாரமாக நீரஜ் நடமாட்டத்தை நோட்டமிட்டு வந்துள்ளனர்.. கடந்த வெள்ளிக்கிழமை வானிலை மேகமூட்டமாக இருந்ததாலும், சாலையில் அதிக மக்கள் இல்லாததாலும், அவர்கள் கொலை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர்.

அதன்படி, இரண்டு பைக்குகளில் வந்த மர்மநபர்கள், நீரஜை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளனர்… இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் போலீசார் நான்கு பேரை கடந்த சனிக்கிழமை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.