ஹீரோ
கர்நாடகாவில் கன்னட நடிகர் துனியா விஜய், உடற்பயிற்சியாளர் ஒருவரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட பிரபலமான நடிகர் துனியா விஜய். இவர் பாடிபில்டராக இருந்தவர். இந்நிலையில், பெங்களூருவில் நடந்த ஆணழகன் போட்டிக்கு நேற்று முன்தினம், துனியா விஜய் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அங்கு மாருதி கவுடா எனும் உடற்பயிற்சியாளரிடம், தான் முன்பு பயிற்சி மேற்கொண்டு வந்த பானிபூரி கிட்டி என்ற உடற்பயிற்சியாளர் பற்றி துனியா விஜய் விசாரித்தாராம். அப்போது பானிபூரியை நடிகர் துனியா விஜய் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, துனியா விஜய் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாருதி கவுடாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு, மாருதி கவுடாவை தனது காரில் கடத்திச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து விஜய் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பானிபூரி கிட்டி உடனடியாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, துனியா விஜய்க்கு போன் செய்த பொலிஸ் அதிகாரி ரவிசங்கர், இன்னும் ஒரு மணி நேரத்தில் மாருதி கவுடாவோடு நீங்கள் இங்கு வந்து நிற்க வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.
அதன் பின்னர், துனியா விஜய் ஒரு மணி நேரத்துக்குள் காவல் நிலையம் வந்தடைந்தார். அங்கு பானிபூரி, விஜய்யிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் பானிபூரியின் ஆதரவாளர்கள் துனியா விஜய்யின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.
இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நடிகர் துனியா விஜய், அவரது நண்பர்கள் மணி, பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த மாருதி கவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரபல கன்னட நடிகர் கைது செய்யப்பட்ட விடயம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.