கல்லாகி போன பெற்றோரின் மனம் : காட்டுக்குள் கதறி அழுத குழந்தை!!

531

கதறி அழுத குழந்தை

ஓசூர் அருகே சூளகிரியில் உள்ள காட்டுப்பகுதியில் மழையில் நனைந்தபடி கதறி அழுதுகொண்டிருந்த 2 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள மேலுமலை வனப்பகுதி, மிகவும் அடர்ந்த காட்டுபகுதியாகும். இந்த காட்டு பகுதியில் நின்று கொண்டு 2 வயதுள்ள சிறுமி ஒருவர் மழையில் நனைந்தபடி அழுதுகொண்டிருந்துள்ளார்.

சிறுமியின் சத்தம் கேட்டு அப்பகுதி வழியே சென்ற பாலு என்பவர் திரும்பி பார்த்துள்ளார். யாருமில்லாத இடத்தில சிறுமி மட்டும் தனியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், யார் அழைத்து வந்தது என சிறுமியிடம் விசாரித்துள்ளார்

அதற்கு அந்த சிறுமி கன்னட மொழியில், தந்தை பெயர் அஞ்சப்பா, தாயாரின் பெயர் அனிதா என்றும் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும் அழுதபடியே பதிலளித்துள்ளார். ஆனால் அந்த சிறுமிக்கு தன்னுடைய பெயரை சொல்ல தெரியவில்லை.

இதனை கேட்டு என்ன செய்வதென தெரியாமல் திகைத்த பாலு, உடனே சிறுமியை மீட்டு தனது நண்பர் கிருஷ்ணன் வீட்டில் ஒப்படைத்தார்.

பின்னர் அவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, திமுக முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் வீட்டில் குழந்தையை ஒப்படைத்தார்.

தற்போது இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை பெற்றோர் தனியாக அடர்ந்த காட்டுப்பகுதியில் தனித்து விட்டு சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.