திருமணமான மூன்றே மாதத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் மர்மமாக மரணம் : தலைமறைவான கணவன்!!

1197

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் கர்ப்பிணிப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், டவன்கேரே மாவட்டத்தில் உள்ள மியபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் (32). இவருக்கும் ரூபா பாய் (22) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கங்காதரின் பெற்றோர் கேட்ட வரதட்சணையை ரூபாவின் குடும்பத்தினர் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ரூபாவின் பெற்றோர் அவருக்கு 3 கிராம் நகை குறைவாக போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ரூபாவை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒன்றரை மாதம் கர்ப்பமாக இருந்த ரூபா, மூன்று நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்ததாக கூறி சன்னகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்தே ரூபாவின் குடும்பத்திற்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோது, ரூபா உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது.

இதனால் ரூபாவின் பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரூபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கணவர் கங்காதர் தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் கங்காதரை தேடி வருகின்றனர்.