
தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கணவர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். டால்டன் செல்வ எட்வர்ட் என்பவர் வழக்கறிஞராக இருந்த நிலையில் அவரது மனைவி சைனி பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி எதாவது விடயம் தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சொந்த வீடு கட்டுவது தொடர்பாக கணவன்- மனைவி இருவரும் பேசி உள்ளனர். அப்போது எட்வர்ட் போதையில் இருந்ததால் மீண்டும் சைனியுடன் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆத்திரமடைந்த எட்வர்ட் அரிவாளை எடுத்து சைனியை சரமாரியாக வெட்ட அவர் பலத்த காயத்துடன் மயங்கி சரிந்துள்ளார்.
மனைவி இறந்து விட்டதாக கருதிய வழக்கறிஞர் எட்வர்டு, மைசூருக்கு தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைனி உயிருக்கு போராடி வருகிறார்.
இந்நிலையில், மைசூரில் ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் எட்வர்டு சடலமாகக் கிடந்தார். அவரது சட்டை பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து, தற்கொலை செய்தது அவர் தான் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாய் தந்தையரின் ஈகோ யுத்தத்தால் அவர்களின் இரு குழந்தைகளும் தவித்து வரும் சூழலில் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.