மந்திரவாதி

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் சொத்தை பாதுகாக்கும் பொருட்டு சொந்த மனைவி மற்றும் மகளை சாமியாருக்கு விருந்தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் தேவராஜ்பாளையத்தை சேர்ந்த மணி என்பவர் கோவையை சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மணியின் பெயரில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. . கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மணியும், அவரது தம்பி துரைசாமியும் சேர்ந்து குட்டி மணி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். பரிகார பூஜை நடத்தவேண்டும், அப்போது தான் சொத்து நிலைக்கும் என அந்த மந்திரவாதி கூறியுள்ளார்.

பின்னர் அவர்களது தோட்டத்திற்கு அருகேயுள்ள ஒரு ஓடையில் இரவு 7 மணிக்கு மல்லிகாவை மட்டும் தனியாக பூஜைக்கு அழைத்து சென்ற மந்திரவாதி, விடிய விடிய பூஜை நடத்தினார். தொடர்ந்து குட்டி சாத்தானை ஏவி விடுவதாக கூறி மல்லிகாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விடயத்தை மணியிடம் கூறிய போது, மானம் போய் விடும் எனக்கூறி புகார் செய்ய தடை விதித்தார். இதைத் தொடர்ந்து மற்றொரு நாள் மூத்த மகளையும் ஒவ்வொரு அமாவாசை நாளில் பூஜைக்கு அழைத்து சென்ற குட்டிமணி அவரை தனியாக அழைத்து சென்று பூஜை செய்வதாக கூறி கற்பழித்துள்ளார். இந்த விஷயத்தை மகளும் மறைத்து விட்டார்.
இதுதொடர்பாக மணிக்கும், மல்லிகாவுக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மணி மல்லிகாவை கோவை ரத்தினபுரியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
அங்கு தனது அண்ணன், தம்பி ஆகியோருடன் வசித்து வந்த நிலையில் மல்லிகாவிடம் இருந்த 6 பவுன் தங்க நகை, 1 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு அவர்களும் விரட்டி விட்டுள்ளனர்.
இதையடுத்த தனது குழந்தைகளுடன் தான் ஆதரவின்றி தவிப்பதாகவும், தன்னையும், மகளையும் துஸ்பிரயோகம் செய்த மந்திரவாதி, தன் வாழ்கையை நாசம் செய்த கணவர் அவர் தம்பி, பணம் நகையை அபகரித்த சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மல்லிகா கோவை காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
சொத்து நிலைக்க மனைவி, மகளை மந்திரவாதி பலாத்காரம் செய்ய கணவன் மற்றும் கணவனின் தம்பி காரணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.