மாதவிடாய் நேரத்தில்..

தமிழகத்தில் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடத்தில் பெண்களை தங்க வைக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூவலபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் அவர்கள் வீட்டில் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்காக முட்டுத்துறை என்றழைக்கப்படும் இடத்தில் தங்குவதற்கு இரண்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளில் ஒன்று 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மற்றொரு அறை 5 அடி அகலமும் 5 அடி நீளமும் கொண்டதாக இருக்கிறது. இந்த அறைக்கு வெளியே உள்ள மரத்தில் துணிப்பைகள் தொங்கவிடப் பட்டுள்ளன.

அந்த துணிப்பைகளில், உள்ளே இருக்கும் பெண்களுக்கு தேவையான தட்டு, டம்ளர், சாப்பாடு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, குறிப்பிட்ட நாட்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

அதோடு அந்தக் கட்டிடத்தில் இருக்கும் பெண்களை தொடுபவர்கள் குளிக்காமல் வீட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை. 21வது நூற்றாண்டிலும் இப்படியான கட்டுபாடுகள் பின்பற்றப்படுவது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆனால் பல தலைமுறைகளாக இதை நாங்கள் பின்பற்றி வருவதால் இதில் தவறு இருப்பதாக கருதவில்லை என கிராம மக்கள் கூறியுள்ளனர்.